இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு அரிசியை இறக்குமதி செய்வதில் இதுவரை குறிப்பிடத்தக்க அளவில் இடையூறு ஏதும் ஏற்படவில்லை என்று இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து அரிசியைத் தருவிப்பதிலும் சிக்கல் ஏதுமில்லை என்று கூறப்பட்டது.
அத்துடன் விநியோகத் தடை அல்லது விலையேற்றம் ஆகியவற்றின் பாதிப்புகளைத் தணிப்பதில் நாட்டின் அரிசி கையிருப்புத் திட்டம் உதவியதாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்கு அது பதிலளித்தது.
இந்தியா அண்மையில் தீட்டாத அரிசி, பழுப்பு நிற அரிசி ஆகியவற்றுக்கான ஏற்றுமதிக்கு 20 விழுக்காடு வரி விதித்தது; குருணை அரிசி ஏற்றுமதியைத் தடை செய்தது. ஆனால் சிங்கப்பூரில் அத்தகைய அரிசியின் பயன்பாடு மிகவும் குறைவு என்று அமைச்சு கூறியது.
அரசாங்கம் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து சிங்கப்பூருக்கு அரிசி விநியோகம் போதிய அளவில் இருப்பதை உறுதிசெய்யும் என்று அது குறிப்பிட்டது.
அரிசி கையிருப்புத் திட்டத்தின்கீழ், இறக்குமதியாளர்கள் தங்கள் சராசரி மாதாந்தர இறக்குமதி அளவைப்போல இரு மடங்கு அரிசியைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிங் யோம் ஜூலை மாதத்தில் தெரிவித்திருந்தார்.
ஷெங் சியோங் பேரங்காடி 'ஹவுஸ்' வணிக முத்திரை கொண்ட அரிசியின் விலையைக் குறுகிய காலத்திற்கு ஏற்றப்போவதில்லை என்று கூறியிருக்கிறது. ஃபேர்பிரைஸ் பேரங்காடி அதன் அரிசிப் பொருள்களின் விலை நிலையாக இருக்கும் என்று கூறியுள்ளது.
ஆனால் இந்தியாவின் நடவடிக்கையால் அரிசி விலை அதிகரிக்கும் என்று சில வர்த்தகங்கள் தெரிவித்துள்ளன.
முஸ்தஃபா செண்டர் அதன் ஆக அண்மைக் கொள்முதல் இங்கு வந்து சேர்ந்தவுடன் அரிசி சார்ந்த பொருள்களின் விலை 20 விழுக்காடு உயர்த்தப்படும் என்று கூறியுள்ளது.
அரிசி விநியோகத்தில் சிக்கல் இல்லை என்றும் விலை மட்டும்தான் பாதிக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.
சென்னை டிரேடிங் அண்ட் சூப்பர்மார்க்கெட் நிறுவனம், அதனிடம் அதிக அளவில் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு சமைத்துத் தருபவர்கள் என்றும் அவர்கள் இப்போது தயக்கம் காட்டுவதாகவும் கூறியது.
நிறுவனம் பாஸ்மதி ரக அரிசியைத் தவிர்த்து மற்ற அனைத்து ரக அரிசியின் விலையும் அதிகரிக்கும் என்று கூறியது. நேற்று முதல் 25 கிலோகிராம் அரிசி மூட்டையின் விலையை அது ஐந்து வெள்ளி கூட்டியது.
கேட்டரிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம், சமைத்த உணவின் விலையை படிப்படியாக அதிகரிக்கவிருப்பதாகக் கூறியது.
ஒரு நாளைக்கு ஐந்து டன் அரிசியைப் பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு சமைக்கும் இந்நிறுவனம் அண்மையில் மலேசிய கோழி ஏற்றுமதித் தடையின்போது உணவு விலையை அதிகரித்தது.

