உலகைப் பிடித்து ஆட்டி வந்த கொரோனா தொற்று முடிகிறது. இதற்கான அறிகுறி தெரிகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 உலகம் முழுவதும் ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்து இருக்கிறது.
அந்தத் தொற்றில் இருந்து இன்னமும் நாம் விடுபடவில்லை என்றாலும் அதற்கான அறிகுறி தெரிகிறது என்று மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் அந்த உலக நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்தார்.
இருந்தாலும் இப்போதைய நல்ல வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள உலகம் முயற்சிகளை தொடர வேண்டிய தேவை உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
"நெடுந்தொலைவு ஓட்டத்தில் வெற்றிக் கோடு தெரிகிறது. இந்த நேரத்தில் வேகத்தை குறைத்துவிடக்கூடாது. கூடுமானவரை முயல வேண்டும். வெற்றி கிட்டி வருகிறது. இப்போது ஓட்டத்தை நிறுத்திவிட்டால் விளைவு மோசமாகிவிடும்," என்று அவர் எச்சரித்து இருக்கிறார்.
இந்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டால் அந்தக் கிருமி மேலும் மேலும் உருமாறி மேலும் மரணங்களை, தொல்லைகளை, நிச்சயமில்லாத நிலைகளை ஏற்படுத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது என்றாரவர்.
உலகத்தை கொவிட்-19 கிருமி பிடித்துவிட்டது என்று 2020 ஜனவரி மாதம் அனைத்துலக அவசர நிலையை ஐநா அமைப்பு பிரகடனப்படுத்தியது. அதற்குப் பிறகு இப்போதுதான் நம்பிக்கைமிக்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கொரோனா கிருமி 2019 பிற்பகுதியில் சீனாவில் தலைகாட்டியது. உலகம் எங்கும் பரவி ஏறக்குறைய 6.5 மில்லியன் மக்களைக் கொன்று இருக்கிறது. 606 மில்லியன் மக்கள் அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
உலகப் பொருளியலே முடங்கியது. சுகாதாரப் பராமரிப்பு ஏற்பாடுகளுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
தடுப்பூசிகள், இதர சிகிச்சைகள் காரணமாக மரணங்கள் குறைந்தன. மருத்துவ மனைகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை படிப்படியாகக் குறைந்தது.
2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட மரணம் சென்ற வாரம் மிகக் குறைந்த அளவுக்கு இருந்ததாக ஐநா தெரிவித்து உள்ளது.
இருந்தாலும் முழு விழிப்புநிலையில் இருந்து வரும்படி திரு டெட்ரோஸ் உலக நாடுகளை மறுபடியும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
கொள்கைகளை மீண்டும் ஆராய்ந்து அவற்றைப் பலப்படுத்தி கொவிட்-19 கிருமியும் இதர வகை கிருமியும் எதிர்காலத்தில் தலைகாட்டாமல் தடுத்துக்கொள்ளும் வகையில் நாடுகள் செயல்பட வேண்டி இருக்கிறது என்றார் அவர்.
எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும்படியும் கொவிட்-19 பரிசோதனைகளை இடைவிடாமல் தொடரும்படியும் வலியுறுத்திய அவர், மருத்துவக் கருவிகள், சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள் போதிய அளவில் இருப்பதை எப்போதுமே உலக நாடுகள் உறுதிப்படுத்தி வரவேண்டும் என்றும் கூறினார்.
இதனிடையே, எதிர்காலத்தில் கிருமித்தொற்று உலகம் முழுவதும் வெவ்வேறான காலகட்டத்தில் தலைகாட்டக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று உலக சுகாதார நிறு வனத்தின் மூத்த தொற்றுநோய் துறை வல்லுநர் மரியா வேன் கெர்கோவ் எச்சரித்தார்.
"இந்த ஆண்டில் மட்டும் ஒரு மில்லியன் பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆகையால், கொரோனா கிருமி உலகளவிலும் பெரும்பாலான நாடுகளிலும் அவசரநிலையிலேயே இன்னமும் இருந்து வருகிறது," என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, அக்டோபரில் இந்த உலக நிறுவனத்தின் அடுத்த வல்லுநர்கள் கூட்டம் நடக்கும் என்றும் கொவிட்-19 அனைத்துலக அளவில் இன்னமும் கவலை தரும் ஒன்றாக இருக்குமா என்பது பற்றி அப்போது முடிவு செய்யப்படும் என்றும் அந்த அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
கொவிட்-19 முடிவுக்கான அறிகுறி தலைகாட்டி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்து இருப்பதை சீனாவில் பலரும் அவநம்பிக்கையுடன் வரவேற்று இருக்கிறார்கள். அந்த அறிவிப்பை எள்ளி நகையாடியும் இருக்கிறார்கள். சீனாவில் இன்னமும் மில்லியன் கணக்கான மக்கள் கொரோனா கிருமி காரணமாக முடங்கிய நிலையிலேயே இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கிருமியை அறவே துடைத்தொழிக்க வேண்டும் என்பதே சீனாவின் கொள்கையாக உள்ளது. கொரோனாவுடன் வாழ சீனா தயாராக இல்லை.

