உஸ்பெக்கிஸ்தானின் சமர்காண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சநிலை மாநாட்டிற்கிடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்துப் பேசினார்.
ரஷ்யா, உக்ரேன்மீது போர் தொடுத்ததற்குப் பிறகு இரு தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல்முறை.
சந்திப்பில் இருதரப்பு, வட்டார, உலக விவகாரங்கள் குறித்துப் பிரதமர் மோடியும் அதிபர் புட்டினும் கலந்துரையாடினர்.
இது போருக்கான காலமல்ல என்று திரு மோடி ரஷ்ய அதிபரிடம் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ள உணவு, உரம், எரிபொருள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்தும் திரு புட்டினிடம் அவர் கலந்துரையாடினார்.
இந்திய-ரஷ்ய உறவுகள் குறித்துத் தொலைபேசியில் தாங்கள் சிலமுறை உரையாடியதைக் குறிப்பிட்ட திரு மோடி, போர் நடைபெற்ற சூழலில் ரஷ்யாவிலும் உக்ரேனிலும் படித்துக்கொண்டிருந்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப உதவியதற்காக இரு நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கான சுழற்சிமுறை தலைமைத்துவத்தை உஸ்பெக்கிஸ்தான் இந்தியாவிடம் நேற்று ஒப்படைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

