சிங்கப்பூரில் செயல்படும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 200,000 பேரின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன. இவை இம்மாதம் 10ஆம் தேதியில் இருந்து இணையத்தில் விற்கப்பட்டதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
வாடிக்கையாளர்களின் பெயர், வீட்டு முகவரி, மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தகவல்கள் இணையத்தில் திருடப்பட்டதாக நிறுவனம் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இருப்பினும் வாடிக்கையாளர்களின் கடன் பற்று அட்டை விவரங்கள் திருடு போகவில்லை என்பதை அந்த மின்னஞ்சல் குறிப்பிட்டது. நிறுவனம் அந்த விவரங்களைப் பதிவுசெய்து வைத்துக்கொள்வதில்லை என்பதை அது சுட்டியது.
தகவல் கசிவு குறித்து இம்மாதம் 13ஆம் தேதி தெரியவந்ததாக ஸ்டார்பக்ஸ் நிறுவனப் பேச்சாளர் கூறினார்.
வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பாதுகாக்கும் பொருட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், இதன் தொடர்பில் அதிகாரிகளுடன் நிறுவனம் முழுமையாக ஒத்துழைத்து வருவதாகச் சொன்னார்.
கசிந்த தகவல்கள் இணையத்தில் விற்கப்பட்டுள்ளன. தகவல் தரவின் ஒரு பிரதி 3,500 வெள்ளிக்கு விற்பனையானதாகத் தெரியவந்துள்ளது. மேலும் நான்கு பிரதி களுக்கான விற்பனை குறித்த தகவல்கள் இணையத்தில் காணப்படுவதாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அடுத்த சில வாரங்களில் மோசடி முயற்சிகளுக்கு இலக்காகக்கூடும் என்பதால் அதுகுறித்து விழிப்புடன் இருக்கும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

