ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து நேற்று எட்டு சிறுத்தைகள் இந்தியா வந்துசேர்ந்தன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது 72வது பிறந்தநாளில், மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்குள் அச்சிறுத்தைகளை விடுவித்தார்.
1948ல் இந்தியாவின் கடைசி சிறுத்தை இறந்தது. அதன் பிறகு நாட்டில் சிறுத்தை இனம் அழிந்துவிட்டதாக 1952ல் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் மீண்டும் சிறுத்தை இனத்தைப் பெருக்கும் நோக்கில் நமீபியாவிலிருந்து ஐந்து பெண், மூன்று ஆண் சிறுத்தைகள் இந்தியாவுக்கு இப்போது கொண்டுவரப்பட்டுள்ளன.
இவற்றைக் கொண்டுவந்த போயிங் சிறப்பு விமானம், மத்திய பிரதேசம், குவாலியர் மாவட்டத்தில் உள்ள ஆகாயப் படைத்தளத்தில் நேற்றுக் காலை தரையிறங்கியது. அதன் பின்னர் ஹெலிகாப்டரில் இவை குனோ தேசிய பூங்காவிற்குக் கொண்டுசெல்லப்பட்டன.
குனோ தேசிய பூங்காவில் கூண்டிலிருந்து சிறுத்தைகளை விடுவித்த பின்னர் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு சிறுத்தைகளை அனுப்பிய நமீபியா அரசுக்கு நன்றி. தற்போது இவை இந்தியா வந்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். காட்டு வளத்தை இவை அதிகரிக்கச் செய்யும்.
"கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன்னதாக அழிந்துபோன இந்த இனம் மீண்டும் இந்திய மண்ணுக்கு திரும்பி வந்துள்ளது. இந்தச் சிறுத்தைகளைப் பார்வையிட சுற்றுப்பயணிகள் சிறிதுகாலம் காத்து இருக்க வேண்டும்," என்று கூறினார்.