உலு பாண்டான் கால்வாயில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை மூடப்பட்ட பூங்கா இணைப்புப் பாதைகளின் சில பகுதிகள் மாலையில் மீண்டும் திறக்கப்பட்டன.
அங்கு திடீர் வெள்ளம் ஏற்படலாம் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் காலை 9.50 மணிக்கு எச்சரிக்கை விடுத்தது.
கால்வாயில் நீர்மட்டம் 90 விழுக்காடு நிறைந்துவிட்டதாகவும் காலையில் கழகம் கூறியது.
கிம் மோ ரோட் அருகில், கிளமெண்டி ரோட் முதல் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் வரையிலான உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பாதையின் சில பகுதிகளைக் காலை 8 மணி அளவில் மூடியதாக தேசிய பூங்காக் கழகம் கூறியது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்கு கழகம் பதில் அளித்தது.
மூடப்பட்டிருந்த பகுதிகள் மழை ஓய்ந்த பின்னர் நண்பகலில் திறக்கப்பட்டன.
இவ்வேளையில் தானும் பொதுப் பயனீட்டுக் கழகமும் நீர்மட்டத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் தேவைப்பட்டால் பூங்கா இணைப்புப் பாதையை மூடப்போவதாகவும் தனது இணையப்பக்கத்தில் தெரிவித்தது.
கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது கால்வாய்க்குள் மண் நிறைந்ததை அடுத்து, அங்கு தண்ணீர் தேங்காமல் இருக்க நீர்வழிப் பாதை அமைக்கப்பட்டது.
முதலில் 3.5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்ட பாதை பின்னர் 10 மீட்டர் அகலத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
நிலச்சரிவால் ஏற்பட்ட சேதத்தைத் சரிசெய்யும் கட்டுமானப் பணிகள் முடிய சில மாதங்கள் பிடிக்கலாம் என்று நம்பப்படுகிறது.