உலு பாண்டான் கால்வாயில் நீர் மட்டம் நேற்று கரையைத் தொடும் அளவுக்கு உயர்ந்ததை அடுத்து கிம் மோவில் உள்ள உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பாதைப் பகுதி மூடப்பட்டது.
பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்றுக் காலை 9.50 மணிக்கு வெள்ள எச்சரிக்கையை விடுத்தது. அந்தக் கால்வாயில் வெள்ள நீரின் அளவு அதன் கொள்ளளவில் 90 விழுக்காட்டைத் தொட்டுவிட்டதாக கழகம் தெரிவித்து இருந்தது.
தேசிய பூங்காக் கழகமும் பொதுப் பயனீட்டுக் கழகமும் தண்ணீர் மட்டத்தை அணுக்கமாகக் கண்காணிக்கப் போவதாகவும் தேவை எனில் பூங்கா இணைப்புப் பாதைப் பகுதியை மூடப்போவதாகவும் பூங்காக் கழகத்தின் இணையத்தளத்தில் தெரிவித்து இருந்தன.
அந்தப் பூங்கா இணைப்புப் பாதைப் பகுதி நேற்று பிற்பகல் நேரத்தில் திறக்கப்பட்டு இருந்தது.
செப்டம்பர் 2ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து அந்தக் கால்வாயில் மண் சரிந்துவிட்டது.
அதையடுத்து அடுத்த நாளன்று தண்ணீர் தேங்காமல் இருக்க நீர்வழிப் பாதை ஒன்று அங்கு அமைக்கப்பட்டது.
சிங்கப்பூரில் வரும் வாரங்களில் மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டு இருக்கிறது.
மழை காரணமாக அந்தக் கால்வாயில் கலக்கும் நீர் விரைவில் ஓடி வெள்ளம் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க அந்த நீர்வழிப் பாதை உதவும்.
நிலச்சரிவால் ஏற்பட்ட சேதத்தைச் சரிசெய்ய இடம்பெறும் கட்டுமானப் பணிகள் முடிவடைய ஓரிரு மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் மேம்பாலச் சாலையில் இருந்து கிளமெண்டி ரோடு வரை செல்லும் பூங்கா இணைப்புப் பாதைப் பகுதி தொடர்ந்து பொதுமக்களுக்கு மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

