பிரதமர்: குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவ பொருத்தமானவை
இன அடிப்படையிலான சுய உதவிக் குழுக்கள், குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவுவதில் இன்னமும் முக்கியமான ஏற்பாடாக இருக்கின்றன என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.
தாங்கள் சேவையாற்றும் மக்களுக்குப் பொருத்தமான செயல்திட்டங்களை வடிவமைக்க அந்தக் குழுக்களால் இயலும் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். சீனர் மேம்பாட்டு உதவி மன்றத்தின் 30வது ஆண்டையொட்டி நேற்று பொது வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அதில் கலந்துகொண்டு திரு லீ உரையாற்றினார்.
சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், மெண்டாக்கி, யுரேஷியர் சங்கம் ஆகியவையும் உள்ளிட்ட சுய உதவிக் குழுக்கள் சிங்கப்பூரின் பல இன சமூகத்தில் இன்னமும் பொருத்தமானவையாக இருப்பது ஏன் என்று மக்கள் அப்போதைக்கு அப்போது கேட்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், சுய உதவிக் குழுக்களுக்கான அவசியத்தை விளக்கினார்.
"இனம் பாராமல் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்குகிறது. அதேவேளையில், சுய உதவிக் குழுக்கள் கூடுதலான உதவிகளை வழங்க முடியும்.
"அதோடு மட்டுமின்றி இன, சமய உணர்வுபூர்வமான நெருடல்கள் எதுவு மின்றி பிரச்சினைகளுக்கு அவை தீர்வு காண முடியும்," என்று திரு லீ குறிப்பிட்டார்.
சுய உதவிக் குழுக்களுக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்குகிறது. அந்த அமைப்புகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் 50 காசு முதல் $3 வரை வழங்குகிறார்கள்.
வசதியான சிங்கப்பூரர்களில் அதிகமானோர், தங்களுடைய சொந்த சமூகங்களுக்கு ஆதரவு அளிக்க உதவக்கூடிய ஓர் ஏற்பாடாகவும் சுய உதவிக் குழுக்கள் திகழ்கின்றன என்று அவர் கூறினார்.
தஞ்சோங் காத்தோங்கில் உள்ள சீனர் மேம்பாட்டு உதவி மன்றத்தின் தலைமையகத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் திரு லீ உரையாற்றினார்.
அந்த நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் இதர நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். அதில் சிறப்பு விருந்தினராக திரு லீ கலந்துகொண்டார்.
"சிங்கப்பூர் பொருளியல் மேலும் வளர்ந்த நிலையை எட்டுகிறது. பொருளியல் வளர்ச்சியைச் சாதிப்பது என்பது முன்பைவிட கடினமாக இருக்கும்.
"சமூக முன்னேற்றத்தைக் கட்டிக்காப் பது இன்னும் சிரமமானதாக இருக்கும். இந்த இலக்குகளைச் சாதிக்க நாம் மேலும் பாடுபடவேண்டி இருக்கும். இதில் சுய உதவிக் குழுக்கள் நமக்கு உதவும்," என்று அவர் கூறினார்.
பொது வரவேற்பு நிகழ்ச்சியில் நேற்று கிட்டத்தட்ட பொதுமக்கள் 650 பேர் கலந்துகொண்டனர். மழை பெய்தாலும்கூட அங்கு பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அவர்கள் மகிழ்ந்தனர்.
"சுய உதவிக் குழு மிகவும் இயற்கையான மனித மன உந்துதல். அது சமூக உறுப்பினர்களுக்கு இடையில் பிணைப்பை வலுப்படுத்துகிறது. சுயசார்பு உணர்வை பலப்படுத்துகிறது. சமூகத்தில் பெருமை கொள்ளச் செய்கிறது.
"இவை எல்லாம் சிங்கப்பூரின் தனித்தன்மைக்கு உறுதுணையாகத் திகழ்கின்றன," என்று பிரதமர் தெரிவித்தார்.
சீனர் மேம்பாட்டு உதவி மன்றம் செய்து வரும் பணிகளை, அளித்து வரும் ஆதரவை, அதன் செயல்திட்டங்களை நிகழ்ச்சியில் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அந்த மன்றம் கிட்டத்தட்ட 18,000 குடும்பங்களுக்கு நன்மை அளிக்கிறது. கடந்த 1992ல் தோற்றுவிக்கப்பட்ட அந்த மன்றம், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது;
துணைப்பாட செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது; மதியுரை ஆதரவை வழங்குகிறது.
அந்த மன்றத்தின் செயல்திட்டங்கள், ஆதரவுத் திட்டங்கள் மூலம் சென்ற ஆண்டில் 17,700 குடும்பங்கள் நன்மையடைந்து இருக்கின்றன.
இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் பலனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கையைவிட கொஞ்சம் குறைவு. 2019ல் பலனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கையைவிட கொஞ்சம் அதிகம் என்று திரு லீ குறிப்பிட்டார்.
சீனர் மேம்பாட்டு உதவி மன்றம் இந்த ஆண்டில் 5,000 மாணவர்களுக்குப் பாட வகுப்புகளை நடத்துகிறது. சிங்கப்பூர் சீன குலவழிச் சங்கங்கள் கூட்டமைப்புடன் சேர்ந்து அது மாணவர்களுக்குப் கல்வி உபகாரச் சம்பளங்களை வழங்கி வருகிறது.
7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பைத் தொடர கிட்டத்தட்ட $3 மில்லியனை அது செலவிட்டு இருக்கிறது.
அந்த மன்றம் அடுத்த ஆண்டில் மேலும் பல செயல்திட்டங்களைச் செயல்படுத்தும் என்று அதன் நிர்வாக இயக்குநர் டான் யாப் கின் நேற்று ஊடகத்திடம் தெரிவித்தார்.
வாரந்தோறும் விளையாட்டு அடிப்படையில் 100 மாணவர்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும் செயல்திட்டம் அவற்றில் அடங்கும்.

