ஜப்பானின் தென்கோடி பிரதான தீவான கியூஷுவை நேற்று நன்மாடோல் என்ற புயல் நிலைகுலையச் செய்துவிட்டது.
அந்தப் புயலை அதிபயங்கர புயல் என்று அமெரிக்க கடற்படை வகைப்படுத்தி இருக்கிறது. கியூஷு தீவில் பேய்மழை பெய்து வருகிறது. ஆற்று நீர் உடைப்பெடுத்து வெள்ளம் பாயும், நிலச்சரிவு ஏற்படும் என்று ஜப்பானிய வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்து இருக்கிறது.
கியூஷு தீவில் நேற்று 500 மி.மீ. மழை பெய்யும் என்றும் 250 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் அந்த நிலையம் முன்னதாகத் தெரிவித்தது.
நன்மாடோல் புயல் கிழக்கு நோக்கித் திரும்பி நாளை செவ்வாய்க்கிழமை தோக்கியோவை எட்டும் என்றும் முன்னுரைக்கப்பட்டு இருக்கிறது.
ஜப்பானில் இது புயல் பருவம். ஆண்டுதோறும் இந்தக் காலகட்டத்தில் அந்த நாட்டில் ஏறக்குறைய 20 புயல்கள் வீசக்கூடும். அவற்றால் கடும் மழை, நிலச்சரிவு, வெள்ளம் ஏற்படுவது வழக்கம்.
ஆனால் இப்போதைய 14வது புயல்போல் கடும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டதாக அண்மைக்கால வரலாறு எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். புயல் எச்சரிக்கையை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் உறைவிடங்களில் தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள்.
பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடும்படி கிட்டத்தட்ட நான்கு மில்லியன் மக்களை அதிகாரிகள் முன்னதாக வலியுறுத்தி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன. ஜப்பானிய பிரதமரும் மக்களை எச்சரித்தார்.
கியூஷு தீவில் உள்ள ககோஷிமா வட்டாரத்திலும் பக்கத்தில் இருக்கும் மியாஷாகி வட்டாரத்திலும் பேய் மழை, பலத்த காற்று காரணமாக 98,000 வீடு களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் செயல்படும் ரயில் சேவைகள், விமானச் சேவைகள், படகு சேவைகள் அனைத்தும் புயல் கடந்து போகும் வரை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பலமான காற்று வீசக்கூடும், கடும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு நிலையம் அந்த வட்டாரத்திற்கு முன்னதாக பல முறை எச்சரிக்கை விடுத்தது.
கூடுமானவரை ஆக அதிக விழிப்பு நிலை தேவைப்படுவதாக ஆய்வு நிலை யத்தின் கணிப்புப் பிரிவின் தலைவர் யுட்டா குரோரா சனிக்கிழமை தெரிவித்தார்.
சிங்கப்பூர் நேரப்படி நேற்றுக் காலை 8 மணிக்கு அந்தப் புயல் ஜப்பானின் யாகூஷிமா தீவுக்கு தென்கிழக்கே 80 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. 252 கி.மீ. வேகத்தில் அது கரையை நோக்கி நகர்ந்தது.

