உலகப் பொருளியல் அச்சம்; பங்குச் சந்தைகளில் எதிரொலி
அமெரிக்க மத்திய வங்கி நேற்று தனது முக்கிய வட்டி விகிதத்தை 0.75 விழுக்காடு உயர்த்தியது.
வட்டியை உயர்த்தியதோடு மட்டுமின்றி, முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததைவிட மேலும் வட்டி உயர்வு இடம்பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த வங்கி தெரிவித்தது.
இதனையடுத்து உலகப் பொருளியல் வளர்ச்சி வேகம் குறையும் என்ற அச்சம் அதிகமானது. அந்த அச்சம் ஆசியப் பங்குச் சந்தைகளில் எதிரொலித்ததால் சந்தைகள் நேற்று வீழ்ச்சி கண்டன.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு நேற்று தொடக்கத்திலேயே 0.28% சரிந்தது. அந்தச் சரிவு நேற்றுப் பிற்பகல் 3.31 மணியளவில் 0.17% ஆக இருந்தது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில், வட்டார அளவில் பார்த்தால் ஹாங்காங் பங்குச் சந்தைதான் நேற்று மோசமாகப் பாதிக்கப்பட்டது.
சீனாவின் பொருளியல் வேகம் குறைவதும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வும் சேர்ந்து நேற்று ஹாங்காங்கின் ஹாங் செங் பங்குச் சந்தையை 2.6% இறக்கிவிட்டன. ஜப்பான், தென் கொரியச் சந்தைகள் 0.6% இறங்கின.
ஷாங்காய் பங்குச் சந்தை 0.27%க்கு குறைந்தது. இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி உயர்வை நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
அதன் காரணமாகவும் ரஷ்ய-உக்ரேன் போர் மேலும் சூடுபிடிப்பதன் விளைவாகவும் அமெரிக்க டாலர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மதிப்பு கூடியது.
இதன் விளைவாக ஆசியப் பங்குகளில் முதலீடு செய்திருப்போர், தங்கள் முதலீடுகளை மீட்டுக்கொண்டு அமெரிக்க டாலர் சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு இருக்கிறது என்று பலரும் கவலை தெரிவித்தனர்.
சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு நேற்று பிற்பகல் 4.08 மணிக்கு 0.2% குறைந்து ஒரு டாலருக்கு 1.4200 வெள்ளியாக இருந்தது.
அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுவடைந்தால் சீனா விரைவில் தன் பொருளியலைத் திறந்துவிடாமல் இருந்தால், ஆசியப் பொருளியல் வளர்ச்சி மேலும் மெது வடையும் ஆபத்துள்ளது.
இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், ஆசியாவின் புதிய சந்தைகளில் இருந்து பெரும் பணம் வெளியாகிவிடும் என்று ஆர்ஹெச்பி சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்கு ஆய்வுத் துறைத் தலைவர் சேகர் ஜாய்ஸ்வால் கூறினார்.
இருந்தாலும் இதர ஆசிய நாணயங்களுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூர் வெள்ளி வலுவாக இருப்பதால் சிங்கப்பூர் கொஞ்சம் சிறப்பாகவே செயல்படும் என்றாரவர்.
சிங்கப்பூர் நாணயத்தைத் தொடர்ந்து வலுவாக வைத்திருந்து அதன் மூலம் சிங்கப்பூர் நாணய ஆணையம் பணவீக்கத்தைச் சமாளித்து வருகிறது.
சிங்கப்பூர் நாணயம் வலுவாக இருப்பதால் அதனை அடிப்படையாகக் கொண்ட முதலீடுகள் கவர்ச்சிகரமானவையாக இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க மத்திய வங்கி கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தனது வட்டி விகிதத்தை 0.75% உயர்த்துவதாக நேற்று அறிவித்தது. 3% முதல் 3.25% வரை வட்டி விகிதம் உயர்வதற்கு இலக்கு உள்ளதாகவும் அது தெரிவித்தது.
இதன் விளைவாக கடன் வாங்குவதற்கான செலவு மேலும் அதிகரிக்கும். அது தொடர்ந்து அப்படியே இருந்து வரும் என்று அந்த வங்கி குறிப்பிட்டுள்ளது.
சந்தையில் தேவைகளை மட்டுப்படுத்த வட்டி விகித அதிகரிப்பு அவசியமானதாக இருக்கிறது என்று மத்திய வங்கி தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்தார்.
அமெரிக்க வட்டி விகித உயர்வைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் வட்டி விகிதம் மேலும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.