இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு எதிராக நேற்று இடம்பெற்ற நாடுதழுவிய சோதனைகளில் மொத்தம் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாட்டில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற ஆதரவு அளித்ததாகக் கூறப்பட்டதையொட்டி 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைதானதாக தேசிய புலனாய்வு முகவை அமைப்பைச் சேர்ந்த அதி காரிகள் தெரிவித்தனர்.
கேரளாவில்தான் ஆக அதிகமாக 22 பேர் பிடிபட்டனர். மகாராஷ்டிரா (20), கர்நாடகா (20), தமிழ்நாடு (10), அசாம் (9), உத்திரப் பிரதேசம் (8), ஆந்திரா (5), மகாராஷ்டிரா (4), புதுச்சேரி (3), புது டெல்லி (3), ராஜஸ்தான் (2) ஆகிய மாநிலங்களிலும் பலர் சிக்கினர்.
இன்றைய தேதியில் இதுவரை இதுபோன்ற ஆகப்பெரிய அளவில் சோதனை இப்போதுதான் நடக்கிறது என்று அதிகாரிகள் கூறினர். மேல் விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
தேசிய புலனாய்வு முகவை, அமலாக்கத்துறை, மாநில காவல்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்வது, பயிற்சி முகாம்களை நடத்துவது, குறிப்பிட்ட அமைப்புகளில் சேரும்படி மக்களை தீவிரமாக மனம் மாற்றுவது ஆகியவற்றில் சம்பந்தப்பட்டு இருப்பதாக நம்பப்படும் பேர்வழிகளின் வீடுகளில் சோதனைகள் நடந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு 2006ஆம் ஆண்டில் கேரளாவில் அமைக்கப்பட்டது.அதற்குப் புதுடெல்லியில் தலைமையகம் உள்ளது.
மனித உரிமைகளுக்கும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தலித் ஆகியோரின் சுதந்திரத்திற்கும் பாடுபடும் தேசிய இயக்கம் என்று அந்த அமைப்பு தன்னைக் குறிப்பிட்டு வருகிறது.
அந்த அமைப்பு, நேற்றைய சோதனைகளை கடுமையாகக் குறைகூறியது. சோதனைகளை எதிர்த்து பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன.
அவற்றில் கலந்துகொண்டவர்களும் கைதாயினர் என்று ஊடகத் தகவல்கள் கூறின. சோதனைகள் புதன்கிழமை பின்னிரவு 1 மணிக்குத் தொடங்கியது. நேற்று அதிகாலை 5 மணிக்கு அது முடிவடைய இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவற்றில் 1,500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பல ஆவணங்கள், 100க்கும் மேற்பட்ட கோப்புகள், கைப்பேசிகள், மடிக்கணினிகள் ஆகியவற்றையும் இதர பலவற்றையும் அதகாரிகள் கைப்பற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சோதனைகள் தொடர்பில் நேற்று உடனடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தலைநகரில் உயர்நிலைக் கூட்டம் நடந்தது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, புலனாய்வு முகவை பொது இயக்குநர் தின்கர் குப்தா ஆகியோருடன் திரு அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.