ஈசூனில் உள்ள நார்த்பாயிண்ட் சிட்டி கடைத்தொகுதியில் இருக்கும் 'மலேசியா சியாக்!' உணவு நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது. அங்கு பூச்சிகள் மொய்த்ததாகக் கூறப்பட்டது.
நிலையத்தைக் கடந்த புதன்கிழமை 22ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை மூடும்படி சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டது.
தனது வளாகத்தில் கடந்த 12 மாதங்களில் பூச்சிகள் மொய்ப்பதைத் தடுக்கத் தவறியதற்காக 'மலேசியா சியாக்!' நிலை யத்திற்கு இரண்டு குற்றங்களின் பேரில் மொத்தம் $800 அபராதமும் விதிக்கப்பட்டது. ஒவ்வொரு குற்றத்திற்கும் ஆறு குற்றப்புள்ளிகளும் கொடுக்கப்பட்டன. ஆனால் அவை எந்த வகை பூச்சிகள் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு குறிப்பிடவில்லை.
அந்த 'மலேசியா சியாக்!' உணவு நிலையக் கிளையைத் தற்காலிகமாக மூடவேண்டும் என்ற உத்தரவு செப்டம்பர் 1ஆம் தேதி கிடைத்ததாகவும் அதைப் பயன்படுத்தி கிளையின் வடிவமைப்பை மாற்றி சுத்தமான சூழலுக்கு ஏற்றாற்போல் மாறிக்கொள்ள முயற்சிகள் இடம்பெறுவதாகவும் மலேசியா சியாக்!' பேச்சாளர் தன்னிடம் கூறினார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
உணவைக் கையாளும் தனது அனைத்து ஊழியர்களையும் மீண்டும் உணவுப் பாதுகாப்பு, சுத்தம் ஆகியவை குறித்த மறுபயிற்சிக்கு அனுப்பப்போவதாக 'மலேசியா சியாக்!' தெரிவித்தது.
நார்த்பாயிண்ட் சிட்டியில் உள்ள மலேசியா சியாக் உணவு நிலையம் 12 மாதத்தில் 12 குற்றப்புள்ளிகளைப் பெற்றிருப்பதாக உணவு அமைப்பு தெரிவித்தது.