சிங்கப்பூரில் சென்ற மாதப் பணவீக்கம் 14 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட உச்ச அளவை நெருங்கியுள்ளது.
உணவு, சேவைகள் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்ததே அதற்கு முக்கிய காரணம்.
வாகனங்கள், குடியிருப்புச் செலவுகள் ஆகியவை சேர்க்கப்படாத மூலாதாரப் பணவீக்கம், சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆகஸ்ட் மாதத்தில் 5.1 விழுக்காடு உயர்ந்தது.
ஒப்புநோக்க, ஜூலை மாதத்தில் மூலாதாரப் பணவீக்கம் 4.8 விழுக்காடு கூடி இருந்தது.
சிங்கப்பூரில் மூலாதாரப்பணவீக்கம் உச்ச அளவாக 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காணப்பட்டது. அப்போது மூலாதாரப் பணவீக்கம் 5.5 விழுக்காடு உயர்ந்தது.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் உணவுச் சேவைகள், சமைக்காத உணவு ஆகியவற்றின் விலைகள் அதிகரித்தன.
விடுமுறைக்குச் செலவு செய்வது கூடியதால், சேவைத் துறையிலும் பணவீக்கம் அதிகரித்தது.
மேலும், ஒட்டுமொத்த பணவீக்கம் 14 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட உச்ச அளவைத் தொட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில், ஒட்டுமொத்த பணவீக்கம் 7.5 விழுக்காடு அதிகரித்தது.
கடைசியாக, 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே போல உச்ச அளவாக ஒட்டுமொத்த பணவீக்கம் 7.5 விழுக்காடாக இருந்தது.
கார் விலைகள் வெகுவாகக் கூடியதே இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்று கூறப்பட்டது.