மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரும் அம்னோ கட்சியின் தலைவருமான அகமது ஸாஹித் ஹமிடி விசா தொடர்பான லஞ்ச ஊழல் வழக்குகளில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். இது அவருக்கும் அவரது கட்சிக்கும் ஊக்கமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, பொதுத் தேர்தலை இவ்வாண்டிலேயே நடத்திமுடிக்கும் சாத்தியத்தை நேற்றைய நீதிமன்றத் தீர்ப்பு அதிகரித்துள்ளதாகக் கருதப்படு கிறது.
வெளிநாட்டு விசா முறைக்கான அரசாங்கக் குத்தகையைப் பெற்ற அல்ட்ரா கிரானா நிறுவனத்திடம் இருந்து 42 மில்லியன் ரிங்கிட் (US$9.2 மில்லியன்) லஞ்சம் பெற்றதாக ஸாஹித்மீது 33 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தன.
69 வயதான ஸாஹித், உள்துறை அமைச்சராக இருந்தபோது அந்த அமைச்சுக்காக வெளிநாட்டு விசா வழங்கும் முறையையும் சீனாவில் வழங்கிவரும் சேவைகளுக்கான குத்தகையையும் அல்ட்ரா கிரானா நிறுவனத்துக்கு நீட்டிக்க அவர் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதே நிறுவனத்திடமிருந்து 1.15 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி, 3 மில்லியன் ரிங்கிட், 15,000 சுவிஸ் பணம், 15,000 அமெரிக்க டாலர் ஆகியவற்றைப் பெற்றதாக இதர ஏழு குற்றச்சாட்டுகள் ஸாஹித் மீது சுமத்தப்பட்டு இருந்தன. இந்தத் தொகையின் மொத்த மதிப்பு US$1.5 மில்லியன்.
இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் உறுதியான ஆதாரங்களை முன்வைக்கத் தவறிவிட்டதாக ஷா அலாம் உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மது யாஸித் முஸ்தஃபா தெரிவித்ததாக மலேசிய ஊடகங்கள் குறிப்பிட்டன.
குறிப்பாக, முக்கியமான மூன்று அரசுத் தரப்பு சாட்சியங்கள் நம்பகத்தகுந்தனவாக இல்லை என்று நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டதாகவும் அந்த ஊடகங்கள் தெரிவித்தன. அந்த மூவரும், ஸாஹித் லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்ட அல்ட்ரா கிரானா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள்.
இந்த வழக்குகளுக்கான விசாரணை கடந்த ஆண்டு மே 24ஆம் தேதி தொடங்கியது. அரசுத்தரப்பில் 18 பேர் சாட்சியமளித்தனர்.
தீர்ப்பிற்குப் பின்னர் நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸாஹித், நீதிபதி தமது தீர்ப்பை வெளியிடும் முன் சட்டத்தின் எல்லா அம்சங்களை ஆராய்வார் என்ற நம்பிக்கை வழக்கின் ஆரம்பம் முதலே தமக்கு இருந்த தாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும் இவர் மீது இதர 47 குற்றச்சாட்டுகளை இவர் இன்னும் எதிர்நோக்குகிறார். யாப் என்னும் அறப்பணி நிறுவனத்தின் அறங்காவலராகவும் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரம் பெற்ற ஒரே நபருமான ஸாஹித், நம்பிக்கை மோசடி செய்ததாக 12 குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டு உள்ளன.
மேலும், 8 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளும் கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றுவது தொடர்பான 27 குற்றச்சாட்டுகளும் இன்னும் விசாரணையில் உள்ளன.

