பங்ளாதேஷில் நிகழ்ந்த படகு விபத்தில் குறைந்தது 32 பேர் உயிரிழந் தனர் என்றும் பலர் காணாமல் போயினர் என்றும் அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிறு அன்று பஞ்சகர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பக்தர்கள் துர்கா பூஜையில் பங்கேற்பதற்காக போதேஷ்வரி கோயிலுக்குப் படகில் சென்றனர். கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது பாரம் தாளாமல் படகு கவிழ்ந்தது.
இதுவரை 16 பெண்கள், பத்து குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பஞ்சகர் மாவட்ட நிர்வாகியான ஜஹுருல் தெரிவித்தார்.
மாவட்டக் காவல்துறை தலைவர் சிராஜுல் ஹுடா, கரடோயா ஆற்றில் ஏழு உடல்கள் மிதந்து கொண்டிருந்ததாகக் கூறினார்.
படகில் ஏறக்குறைய 90 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் 50க்கும் மேற்பட்டோர் துர்கா பூஜைக்குச் சென்ற பக்தர்கள் என காவல்துறை தெரிவித்தது.
"இன்னமும் 60 பேரைக் காணவில்லை," என்று நேற்று காலை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹுடா தெரிவித்தார்.
"படகில் அளவுக்கு அதிகமாக மும்மடங்குக்கு ஆள்கள் ஏற்றப்பட்டிருந்தனர். காலையில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.
"அதனால் அனைவரும் கோயிலுக்கு விரைந்து செல்வதற்காக முட்டிமோதி படகில் ஏறிவிட்டனர். படகோட்டி சிலரை இறங்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் யாரும் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை," என்றார் அவர்.
சில பயணிகள் நீந்தியே கரை சேர்ந்தனர். குறைந்தது 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொலைக்காட்சி 'ஒளிவழி 24' ஒளிபரப்பிய கைத்தொலைபேசி காணொளிகளில் எடை தாள முடியாமல் படகு திடீரென கவிழ்வதையும் படகில் இருந்த பலர் சேறும் சகதியுமாக இருந்த ஆற்றில் விழு வதையும் காண முடிந்தது. இதனைக் கரையில் இருந்து பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து கூச்சலிட்டனர்.
பங்ளாதேஷில் அடிக்கடி படகு விபத்து நிகழ்கிறது. ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இத்தகைய விபத்துகளில் உயிரிழக் கின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் தெற்கு பங்ளாதேஷில் மூன்று அடுக்கு படகு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் டாக்காவுக்கு அருகே ஷிடாலாக்ஷயா ஆற்றில் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்பட்ட படகு, சரக்குப் படகுடன் மோதி கவிழ்ந்தது.
இதில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டனர்.