ஷின்சோ அபேக்கு இறுதி மரியாதை

ஷின்சோ அபேக்கு இறுதி மரியாதை

1 mins read
980943ea-4205-4600-885a-97415db4ee5b
தலைநகர் தோக்கியோவில் நடைபெற்ற முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கு. படம்: ஏஎஃப்பி -

தோக்கியோ: மறைந்த முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமையன்று (27 செப்டம்பர்) நடைபெற்றுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வருகையளித்த 700 பேர் உட்பட சுமார் 4,300 பேர் இந்நிகழ்வுக்கு வருகை தந்தனர்.

சில வாரங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்ட திரு அபேயின் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கு சென்ற ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்ற நிப்போன் புடோக்கான் வளாகத்தில் நடைபெற்றது.

நிப்போன் புடோக்கான் வளாகம் ஜப்பானின் போர்க்கால வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படும் யாசாக்குனி வழிபாட்டுத் தளத்திற்கு சிறிது தூரம் தொலைவில் அமைந்துள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குத் தொடங்கியது.

திரு அபேயின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த பெட்டியை அவரது மனைவி அகீ, புடோக்கான் வளாகத்திற்குக் கொண்டு சென்றார்.

பாதுகாப்புக் குறைபாடுகள்தான் திரு அபே கொல்லப்பட்டதற்குக் காரணம்.

மீண்டும் தவறு நேராமல் இருக்க இறுதிச் சடங்கின்போது பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டது.

ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் தோக்கியோவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் திரு அபேயின் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.