கடந்த ஓராண்டில் சிங்கப்பூரின் மக்கள்தொகை 3.4 விழுக்காடு அதிகரித்து இவ்வாண்டு ஜூன் மாதம் 5.64 மில்லியனாகப் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் அரசாங்கம் ஆண்டுதோறும் வெளியிடும் மக்கள்தொகை அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை செவ்வாய்க்கிழமையன்று (27 செப்டம்பர்) வெளியிடப்பட்டது.
கடந்த ஈராண்டுகளாக குடியரசின் மக்கள்தொகை குறைந்து வந்தததைத் தொடர்ந்து இவ்வாண்டு அந்தப் போக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனினும், கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்கு முன்பு 2019ஆம் ஆண்டு பதிவான மக்கள்தொகையைக் காட்டிலும் இவ்வாண்டின் எண்ணிக்கை சற்று குறைவு.
2019ஆம் ஆண்டு சிங்கப்பூரின் மக்கள்தொகை 5.7 மில்லியனாகப் பதிவானது.
கொள்ளைநோய்ப் பரவல் கட்டுப்பாடுகளும் பயணக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது வெளிநாடுகளில் இருந்த குடிமக்களும் நிரந்தரவாசிகளும் எளிதில் நாடு திரும்ப வகைசெய்தது.
மேலும், வேலை அனுமதி அட்டையின்கீழ் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது கைகொடுத்தது.
இத்தகைய காரணங்களால் சிங்கப்பூரின் மக்கள்தொகை மீண்டும் கூடியுள்ளது.