ஈராண்டுச் சரிவிற்குப் பிறகு 3.4% ஏற்றம்
சிங்கப்பூர் மக்கள்தொகை கடந்த ஓராண்டில் 3.4% கூடி, இவ்வாண்டு ஜூன் மாதத்தில் 5.64 மில்லியனை எட்டியது.
கொவிட்-19 பரவலுக்குமுன் கடந்த 2019ஆம் ஆண்டில் 5.7 மில்லியனை எட்டிய மக்கள்தொகை, அடுத்த ஈராண்டுகளில் சரிவைச் சந்தித்தது.
நேற்று வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் வருடாந்திர மக்கள்தொகை அறிக்கையில் இந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.
கொவிட்-19 கட்டுப்பாடுகளும் பயணக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதை அடுத்து, குடிமக்களும் நிரந்தரவாசிகளும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்புவது எளிதானது; வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கவும் அது வழிவகுத்தது.
திருமணங்கள் கூடின
முந்திய ஈராண்டுகளைக் காட்டிலும் 2021ஆம் ஆண்டில் அதிகமான சிங்கப்பூரர்கள் திருமணம் செய்துகொண்டனர். 2019ஆம் ஆண்டில் 22,165ஆகவும் 2020ஆம் ஆண்டில் 19,430ஆகவும் பதிவான திருமணங்களின் எண்ணிக்கை, 2021ஆம் ஆண்டில் 23,433ஆக உயர்ந்தது.
2021ஆம் ஆண்டில் 31,713 சிங்கப்பூர் குழந்தைகள் பிறந்தன. இது முந்திய ஆண்டைக் காட்டிலும் சற்றே குறைவு. 2020ஆம் ஆண்டில் பிறந்த சிங்கப்பூர் குழந்தைகளின் எண்ணிக்கை 31,816.
2020ல் ஒரு பெண்ணுக்கு 1.1 குழந்தை என ஆக மோசமாக இருந்த குடிமக்கள் மொத்த கருவுறுதல் விகிதம், 2021ல் 1.12 என்று சற்றே மேம்பட்டது. 2019ஆம் ஆண்டில் இவ்விகிதம் 1.14ஆக இருந்தது.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு மக்கள்தொகையையும் திருமணங்களையும் அதிகரிக்க உதவினாலும் மொத்த கருவுறுதல் விகிதம், மூப்படையும் மக்கள்தொகை போன்ற நீண்டகாலப் பிரச்சினைகள் நீடிக்கின்றன.
கடந்த சில பத்தாண்டுகளாகவே மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. ஒற்றையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் சற்று வயதானபின் திருமணம் புரிவோர் குறைவாகக் குழந்தை பெற்றுக்கொள்வதுமே அதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
2017 முதல் 2021 வரை சராசரியாக ஆண்டுக்கு 32,200 சிங்கப்பூர் குழந்தைகள் பிறந்தன. 2012-2016 காலகட்டத்தில் இச்சராசரி 32,900ஆக இருந்தது.
கொவிட்-19 தொற்றுப் பரவலால் திருமணங்கள் தாமதமானதாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டங்களைத் தள்ளிப்போட்டதாலும் 2020, 2021ஆம் ஆண்டுகளில் குழந்தைப் பிறப்பு குறைந்ததாக அறிக்கை குறிப்பிட்டது.
மூப்படைவது தொடர்ந்து அதிகரிப்பு
மூப்படையும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது 65 மற்றும் அதற்குமேல் வயதுடைய சிங்கப்பூரர்களின் விகிதம் 18.4 விழுக்காடாக உள்ளது. இவ்விகிதம் 2021ல் 17.6 விழுக்காடாகவும் 2012ல் 11.1 விழுக்காடாகவும் இருந்தது.
வரும் 2030ஆம் ஆண்டில் 23.8% சிங்கப்பூரர்கள், அதாவது கிட்டத்தட்ட நால்வரில் ஒருவர் 65 மற்றும் அதற்குமேல் வயதுடையவராக இருப்பார். கடந்த பத்தாண்டுகளைவிட மூப்படையும் சிங்கப்பூரர்களின் விகிதம் விரைவாக உயர்ந்து வருகிறது என்று அறிக்கை கூறுகிறது.
சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் உள்ளடக்கிய உள்ளூர்வாசி மக்கள்தொகை அதிகரித்துள்ளது.
2021 ஜூன் மாதம் 3.5 மில்லியனாக இருந்த சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு ஜூனில் 3.55 மில்லியனாக உயர்ந்தது. இது 1.6% வளர்ச்சி. இதே காலகட்டத்தில் நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை 6.3%, அதாவது 0.49 மில்லியனில் இருந்து 0.52 மில்லியனாக அதிகரித்தது.
2022 ஜூன் நிலவரப்படி, உள்ளூர்வாசிகள் அல்லாத 1.56 மில்லியன் பேர் சிங்கப்பூரில் வசிக்கின்றனர். இது 2021ஐக் காட்டிலும் 6.6% அதிகம். 2019ஆம் ஆண்டில் உள்ளூர்வாசிகள் அல்லாதோர் எண்ணிக்கை 1.68 மில்லியனாக இருந்தது.
வெளிநாட்டினர் வேலைக்கு வந்துள்ளது அதிகரித்திருப்பதே இந்த உயர்விற்குக் காரணம். குறிப்பாக, கட்டுமானம், கப்பல் பட்டறை, செய்முறைத் தொழில்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்களே இந்த உயர்விற்குப் பெரிதும் காரணம்.
கடந்த 2020ஆம் ஆண்டில் 5.69 மில்லியனாக இருந்த சிங்கப்பூர் மக்கள்தொகை 2021ல் 5.45 மில்லியனாகக் குறைந்தது. இந்த 4.1% சரிவே, 1950ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆண்டு அடிப்படையில் ஏற்பட்ட ஆகப் பெரிய சரிவு.
சென்ற ஆண்டு 21,537 பேருக்குக் குடியுரிமையும் 33,435 பேருக்கு நிரந்தரவாசத் தகுதியும் வழங்கப்பட்டன. இது, 2020ஆம் ஆண்டைவிட அதிகம். அவ்வாண்டில் 21,085 பேருக்குக் குடியுரிமையும் 27,470 பேருக்கு நிரந்தரவாசத் தகுதியும் வழங்கப்பட்டன.

