பிரதமர் லீ சியன் லூங், இந்தியப் பிரதமர் மோடி உட்பட 4,300 பேர் பங்கேற்பு
மறைந்த முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கு தோக்கியோவில் நேற்று இடம்பெற்றது.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என 700 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 4,300 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, திரு அபேக்கு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்ற நிப்பான் புடோக்கான் அரங்கில் ஜப்பான் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு (சிங்கப்பூரில் பிற்பகல் 1 மணி) இந்நிகழ்வு தொடங்கியது.
திரு அபேயின் அஸ்தியை அலங்கரிக்கப்பட்ட துணியில் வைத்து புடோக்கான் கூடத்திற்குக் கொண்டுவந்தார் அவரின் துணைவியாரான திருவாட்டி அபே அகீ.
ராணுவ இசைக்குழு இசைத்தபின், திரு அபேக்கு 19 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது.
கொல்லப்பட்ட திரு அபேயின் அரசியல் வாழ்வில் இடம்பெற்ற சில முக்கியத் தருணங்கள் இடம்பெற்ற காணொளி காட்டப்பட்டது. அதன்பின் இப்போதைய ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகா உள்ளிட்ட ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவர்கள் திரு அபேக்குப் புகழஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் கலந்துகொண்டு, திரு அபேக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது குறித்துப் பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"திருவாட்டி அபே அகீ, ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரிடம் சிங்கப்பூர் சார்பிலும் சிங்கப்பூரர்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தேன். சிங்கப்பூரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த திரு அபே, இரு நாடுகளுக்கும் இடையே அணுக்க உறவுகள் நீடிக்க கடுமையாக உழைத்தார்," என்று திரு லீ தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கூடன்ஸாக்கா பூங்காவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு பல்லாயிரக்கணக்கானோர் திரு அபேக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, திரு அபேக்கு அரசு மரியாதை வழங்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து, நேற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. ஜப்பானியர்களில் பத்தில் ஆறு பேர் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்ததைக் கருத்தாய்வு முடிவுகள் காட்டின.
அதிகாரபூர்வ இறுதிச் சடங்கு குறித்து பொதுமக்களிடத்தில் கருத்து வேறுபாடு நிலவியதை அடுத்து, திரு அபேக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென எவரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று பிரதமர் கிஷிடா தெரிவித்திருந்தார். அத்துடன், நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்படவில்லை; தேசிய கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவில்லை.
கடந்த ஜூலை 8ஆம் தேதியன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது திரு அபே சுட்டுக்கொல்லப்பட்டார்.

