இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேயின் மனைவி அயோமாவிடம் தொலைபேசி வழியாகப் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக ஆடவர் ஒருவரை அந்நாட்டின் குற்றவியல் புலனாய்வுத் துறை கைதுசெய்தது.
முடிதிருத்துநரான அந்த ஆடவர், ஒரு மில்லியன் இலங்கை ரூபாய் (S$3,955) கேட்டு திருவாட்டி அயோமாவை மிரட்டியதாகக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருவாட்டி அயோமா அளித்த புகாரை அடுத்து, அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.
கொலன்னாவ நகரைச் சேர்ந்த அந்த 37 வயது சந்தேகப் பேர்வழி, இம்மாதம் 22ஆம் தேதி 19 முறை, மறுநாள் 23ஆம் தேதி எட்டு முறை என மொத்தம் 27 முறை திருவாட்டி அயோமாவின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தான் கேட்கும் பணத்தைத் தரவில்லை எனில், மிரிஹானவில் உள்ள திருவாட்டி அயோமாவின் வீட்டிற்குமுன் ஆழிப்பேரலை போன்ற சூழல் உருவாகும் என்றும் கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற போராட்டங்களைக் காட்டிலும் அதிக அளவில் மக்கள் திரள்வர் என்றும் அந்த ஆடவர் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டது.
தான் மிரட்டியது முன்னாள் அதிபரின் மனைவியை என்பது தெரிந்தபிறகும் அந்த ஆடவர் மேலும் 12 முறை தொலைபேசியில் திருவாட்டி அயோமாவை அழைத்ததாகச் சொல்லப்பட்டது.
காலி முகத்திடலில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களிலும் அவர் பங்கெடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே, கொழும்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் அந்த ஆடவருக்குப் பிணை வழங்கியது.
அடுத்த மாதம் 6ஆம் தேதி நீதிமன்றம் இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது.

