சென் ஃப்ரான்சிஸ்கோ நகரிலிருந்து புதன்கிழமை(செப்டம்பர் 28) அதிகாலை சிங்கப்பூர் வந்திறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 37 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆடவர் வெளிநாட்டவர் என அறியப்படுகிறது.
எஸ்கியூ33 விமானம் திங்கள்கிழமை இரவு 10.26 மணிக்கு அமெரிக்காவின் சென் ஃப்ரான்சிஸ்கோ நகரிலிருந்து புறப்பட்டது.
அந்த விமானம் சிங்கப்பூர் ஆகாயப் படையின் எஃப்-16 ரக போர் விமானங்களின் பாதுகாப்புடன் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இன்று காலை 5.50மணிக்குத் தரை இறங்கியது. விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து செவ்வாய்க்கிழமை பின்னிரவு 2.40 மணிக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல் துறை தெரிவித்தது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஆடவர் விமானத்தில் கொண்டு வந்த பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். பின்னர் அவர் விமானச் சிப்பந்திகளைத் தாக்கினார் என்றும் சிப்பந்திகள் அந்த ஆடவரைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர் என்றும் காவல் துறை குறிப்பிட்டது.
விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் இது குறித்த புகைப்படங்களைத் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். யாரோ ஒரு ஆடவர் விமானத்தில் வெடிகுண்டு என்று கத்தியதால் நான்கு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது என்றும் பின்னர் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் கூறியிருந்தார்.
விமானம் தரை இறங்கியதும் சாங்கி விமான முனையம் 3ல் உள்ள ஓடுபாதையின் தனிமையான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
சிங்கப்பூர் ஆயுதப் படையின் ரசாயன, உயிரியல், கதிரியக்க, வெடிகுண்டு தற்காப்புக் குழுவும் விமான நிலைய காவல் துறைப் பிரிவும் விசாரணைக்கு அனுப்பப்பட்டன என்றும் பின்னர் வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டது என்றும் தற்காப்பு அமைச்சு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது..