விமானச் சரக்குகளைக் கையாளும் உலகின் ஆகப் பெரிய நிறுவனத்தை $3 பில்லியன் ஒப்பந்தத்தின்வழி சிங்கப்பூரின் சேட்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
விமானங்களுக்கான சேவைகளையும் பயணிகளுக்கான உணவையும் வழங்கிவரும் சேட்ஸ் நிறுவனம், 'வோர்ல்டுவைட் ஃபிளைட் சர்விசஸ்' நிறுவனத்தை 2.25 பில்லியன் யூரோ (S$3.12 பி.) மதிப்பில் வாங்கியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நிறுவனத்தைக் கையகப்படுத்த, கிட்டத்தட்ட 1.2 பில்லியன் யூரோவை சேட்ஸ் ரொக்கமாகச் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம் முடிவாகக்கூடும் என்று புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, கையகப்படுத்தும் திட்டம் குறித்து செர்பருஸ் கேப்பிட்டல் மேனேஜ்மண்ட்டுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதை சேட்ஸ் நிறுவனமும் கடந்த வாரம் உறுதிப்படுத்தியது.
இதன்படி கையகப்படுத்தும் பணிகள் அடுத்த மாதம் மார்ச் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கையகப்படுத்தும் ஒப்பந்தம் குறித்து, சேட்ஸ் நிறுவனத்தில் சுமார் 39.7% பங்குகள் கொண்டுள்ள தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் தன் ஆதரவைத் தெரிவித்தது.
"சேட்ஸ் நிறுவனம் உருமாறுவதற்கான ஒரு வாய்ப்பு இது," என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி கெர்ரி மோக் கூறினார்.
"வட்டாரங்கள் எங்கிலும் தடையற்ற இணைப்புகள் வேண்டும் என்று எங்களின் வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள். இது வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் பெரிதும் சக்திவாய்ந்த ஒரு கூட்டணி," என்றார் அவர்.
பாரிஸ் நகரைச் சார்ந்த 'வோர்ல்டுவைட் ஃபிளைட் சர்விசஸ்' நிறுவனம், 1971ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. அது 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்ட பிரதான விமான நிலையங்களில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன் நிலவழி சரக்குகளைக் கையாளும் சேவைகளையும் விமான நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவையும் நிறுவனம் வழங்கிவருகிறது.
நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை மதிப்பு, தற்போது 1.3 பில்லியன் யூரோ ஆகும். செர்பருஸ் நிறுவனம் சுமார் 1.2 பில்லியன் யூரோ மதிப்பில் பிளாட்டினம் இக்விட்டியிடமிருந்து 2018ஆம் ஆண்டில் 'வோர்ல்டுவைட் ஃபிளைட் சர்விசஸ்' நிறுவனத்தை வாங்கியது.
அனைத்துலகப் பயணங்கள் தொடங்கிவிட்ட நிலையில் தளவாடச் சேவைகளுக்கான தேவை அதிகரித்துவருகிறது. கையகப்படுத்தும் ஒப்பந்தங்கள் அதிகம் முடிவாகும் நிலையில் சேட்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது.