உலக அளவில் 2021ல் 8வது இடத்தில் இருந்து ஓரிடம் முன்னேறியது; வட்டாரத்தில் இரண்டாவது இடம்
உலகில் புத்தாக்கத்தைப் பொறுத்தவரை சிங்கப்பூர் இப்போது ஏழாவது ஆகப்பெரிய பொருளியலாக இருக்கிறது. சென்ற ஆண்டில் சிங்கப்பூர் எட்டாவது இடத்தில் இருந்தது.
உலக அறிவுசார் சொத்து நிறுவனம் என்ற அமைப்பும் 'போர்டுலாண்ஸ் இன்ஸ்ட்டியூட்' என்ற லாபநோக்கற்ற ஆய்வு அமைப்பும் உலக புத்தாக்க அட்டவணை 2022 என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டன.
அந்த அறிக்கை, சிங்கப்பூரை ஏழாவது ஆக அதிக புத்தாக்கப் பொருளியல் என்று வரிசைப்படுத்தி இருக்கிறது.
புத்தாக்கத்தில் வெற்றி பெறக்கூடிய ஆற்றல் ஒரு நாட்டிடம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு ஏற்ப, 132 நாடுகளை அந்த அறிக்கை ஆராய்ந்து வரிசைப்படுத்தியது.
சுவிட்சர்லாந்துதான் உலகி லேயே புத்தாக்கத்தில் முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்கா, சுவீடன், பிரிட்டன், நெதர்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தென்கொரியா ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நாடு சென்ற ஆண்டு ஐந்தாவது இடத்தில் இருந்தது.
தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல் வட்டாரங்களில் முதலிடத்தை தென்கொரியா பெற்று இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. சீனா, ஜப்பான், ஹாங்காங் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உலகளவில் பார்க்கும்போது சீனா ஓரிடம் முன்னேறி 11வது இடத்தில் உள்ளது. புத்தாக்க நடவடிக்கைகளுக்குச் சாதகமான பொருளியல் சூழல், அந்த நடவடிக்கைகளின் விளைவுகள் ஆகிய இரண்டு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
புத்தாக்க நடவடிக்கைகளைப் பொறுத்தவரை மொத்தத்தில் உலகளவில் சிங்கப்பூர் முதல் இடத்தைத் தக்கவைத்து கொண்டு உள்ளது.
அரசியல், செயல்முறை நிலைப்பாடு, வலுவான விதிமுறைகளை உருவாக்கி அமல்படுத்தும் ஆற்றல் ஆகியவை உள்ளிட்ட பெரும்பாலானவற்றில் சிங்கப்பூர் முதல்இடத்தில் உள்ளது.
அதிக தொழில்நுட்ப இறக்குமதிகள், அறிவியல், பொறியியல் துறைகளில் பட்டதாரிகளின் விகிதாச்சாரம் போன்றவற்றிலும் உயரிய இடத்தில் சிங்கப்பூர் உள்ளது.
இருந்தாலும் புத்தாக்க நடவடிக்கைகளால் உருவாகும் பலாபலன்களைப் பார்க்கையில் சிங்கப்பூர் ஓரிடம் இறங்கி 14வது இடத்தில் உள்ளது.
இதனிடையே, புதிதாக இரண்டு புத்தாக்க அலைகள் தலையெடுக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அறிக்கை தெரிவித்து உள்ளது.
உச்ச ஆற்றல் கணினி, இயந்திர மனிதத் தொழில்நுட்பம்,, தானியக்கம் ஆகியவற்றில் இடம்பெறக்கூடிய புதுப்புது கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஓர் அலை உருவாகக்கூடும்.
உயிரியல் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், புதிய சாதனங்கள், இதர அறிவியல்கள் ஆகியவற்றில் இடம்பெறக்கூடிய நவீனங்களின் அடிப்படையில் மற்றோர் அலை உருவாகக்கூடும் என்று அறிக்கை தெரிவித்து உள்ளது.
என்றாலும் அத்தகைய புத்தாக்க அலைகள் காரணமாக ஏற்படக்கூடிய ஆக்ககரமான பலன்கள் கைகூடிவர காலம் பிடிக்கும் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

