இந்த வட்டாரத்தின் அருட்கொடை மையமாகத் திகழ சிங்கப்பூர் இலக்கு கொண்டிருப்பதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று தெரிவித்தார்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பங்களிக்கும் வகையில் சிங்கப்பூரில் தளம் அமைக்கும்படி குடும்ப அலுவலகங்கள், வர்த்தகங்கள் ஆகியவற்றுடன் தனி
நபர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சிங்கப்பூர் அரசாங்கம் அதன் வரிச் சலுகைத் திட்டங்களை மறுஆய்வு செய்வதாக அவர் கூறினார். அருட்கொடை வழங்கு
வதால் ஏற்படும் தாக்கங்களைக் கண்காணிக்க தேவையான அணுகுமுறைகளை அமைக்கவும் ஏற்புடைய காரணங்களை அடையாளம் காணவும் அருட் கொடையாளர்கள் அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படலாம் என்றார் அவர்.
ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் உள்ள ஷங்ரிலா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற ஆசிய அருட்கொடை உச்சநிலை மாநாட்டில் திரு வோங் கலந்துகொண்டு டிபிஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி பியுஷ் குப்தாவுடன் பேசினார்.
உச்சநிலை மாநாட்டுக்கு தெமாசெக் டிரஸ்ட்டும் தெமாசெக் அறநிறுவனமும் ஏற்பாடு செய்
திருந்தது.
மற்ற நாடுகளில் மிக வலிமைமிக்க அருட்கொடைப் பாரம்பரியங்கள் இருப்பதை நிதி அமைச்
சருமான திரு வோங் சுட்டினார்.
அமெரிக்காவில் சில செல்வந்தர்கள் தங்கள் சொத்தின் ஒரு பகுதியை சமூகத்துக்கு வழங்கியிருப்பதையும் பில் கேட்ஸ் போன்ற சிலர் அறநிறுவனங்கள் அமைத்திருப்பதையும் அவர் உதாரணம் காட்டினார்.
"அருட்கொடை தொடர்பாக சிங்கப்பூரில் ஆக்கபூர்வப் போக்கு நிலவுவதைக் காண்கிறோம். இருப்பினும் சில நாடுகளில் இருக்கும் நீண்டகால, வலிமைமிக்க அருட்கொடைப் பாரம்பரியம் சிங்கப்பூர் இன்னும் மலரவில்லை. அத்தகைய பாரம்பரியத்தைக் உருவாக்க இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது," என்று திரு வோங் தெரிவித்தார்.
$1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பு கொண்ட புதிய நிறு
வனங்கள், குடும்ப அலுவலகங்கள் ஆகியவை சிங்கப்பூரில் தளம் அமைப்பது அதிகரித்துள்ளதாகவும் இது ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாகவும் துணைப் பிரதமர் வோங் கூறினார். வெற்றி கரமாகச் செயல்படும் தொழில்முனைவர்கள் பலர் சிங்கப்பூரில் தளம் அமைப்பதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் தளம் அமைக்கும் வர்த்தகர்களுடன் பேசும்போது சொத்துகளைக் குவிப்பதையும் தாண்டி தங்கள் பெயர் சொல்லும் மரபையும் விட்டுச் செல்ல அவர்கள் விரும்புவதாகத் தெரியவந்துள்ளது என்றார் திரு வோங்.
தங்கள் பண்புநெறிகளுடன் ஒத்துப்போகும், சமுதாயத்துக்கு நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் முதலீட்டு வாய்ப்புகளை அவர்கள் தேடுவதாக திரு வோங் குறிப்பிட்டார்.
இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, சமுதாயத்துக்குப் பலன் தரும் திட்டங்களை அமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியை சமுதாயத்துக்குத் திருப்பித் தரும் அமெரிக்க அணுகுமுறை, அரசு சமூக நல அணுகுமுறை ஆகிய இரண்டில் எந்த அணுகுமுறையை சிங்கப்பூர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று துணைப் பிரதமரிடம் திரு குப்தா கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த திரு வோங், இரண்டும் கலந்த அணுகு முறை சிங்கப்பூர் தேவை என்று கூறினார்.
"அனைத்தையும் தனிநபர்
களின் பொறுப்பில் விட்டுவிட்டால் சமுதாயக் கட்டமைப்பை வலுப்
படுத்தவும் நாட்டை மேம்படுத்தவும் முடியாது.
"அதே சமயம், எல்லாப் பொறுப்புகளையும் அரசாங்கமே ஏற்றுக்கொண்டால் சமுதாயத்தின் பங்களிப்பு இல்லாமல் போய்
விடும்," என்றார் திரு வோங்.
"வர்த்தகத்தில் வெற்றி பெற்று லாபம் ஈட்டிய ஒருவர், அவராகவே முன்வந்து சமுதாயத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்தால் சமூக உணர்வு வலுவடையும். நாட்டில் பணப் புழக்கம் இருக்கும். கிடைத்த லாபத்தின் ஒரு பகுதி மீண்டும் முதலீடு செய்யப்படும். இவ்வாறு வலுவான சமூகக் கட்டமைப்பை உருவாக்கி, மக்களிடையே நம்பிக்கை உணர்வை நிலைநாட்டலாம்," என்றார் திரு வோங்.
நன்கொடை வழங்க சிங்கப்பூரர்களை ஊக்குவிப்பது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டபோது, சிங்கப்பூரர்கள் தாராள குணம் உடையவர்கள் என்றும் நன்கொடை வழங்க அவர்களை ஊக்குவிக்கத் தேவையில்லை என்றும் திரு வோங் தெரிவித்தார்.