துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறார்களை மேலும் எளிதில் கண்டறிந்து அப்பிரச்சினையைச் சமாளிக்க உதவும் புதிய காணொளி இயக்கம் ஒன்று சனிக்கிழமையன்று (1 அக்டோபர்) அறிமுகம் கண்டது.
துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான பாதுகாப்பு இல்லங்களை நடத்தும் நன்கொடை அமைப்பான 'காசா ரெளத்தா' இந்த இயக்கத்தைத் தொடங்கிவைத்தது.
ஒரு பிள்ளை துன்புறுத்தலுக்கு ஆளான அடையாளங்களை இயக்கத்துக்காக உருவாக்கப்பட்ட புதிய காணொளி விவரிக்கிறது.
உணர்வுகளை அதிகம் காண்பிக்காமல் இருப்பது, நண்பர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பது, மற்ற பிள்ளைகளைத் தகாத முறையில் தொடுவது போன்ற அறிகுறிகள் காணொளியில் இடம்பெறுகின்றன.
இதன் தொடர்பில் ஆசிரியர்களுக்கு இருக்கக்கூடிய சில ஐயங்களும் காணொளியில் ஆராயப்படுகின்றன.
துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து புகார் தந்தால் அது பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்குமா போன்றவை ஆசிரியர்களுக்கு இருக்கக்கூடிய ஐயங்களில் அடங்கும்.
சென்ற ஆண்டு, தான் பாதுகாப்பு வழங்கிய ஏழு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் பாதிக்கும் அதிகமானோர் துன்புறுத்தலுக்கு ஆளானதை ஒப்புக்கொண்டதாக 'காசா ரெளத்தா' தெரிவித்தது.
இது, 2020ஆம் ஆண்டு பதிவான எண்ணிக்கையைவிட 17 விழுக்காடு அதிகம்.
குடும்ப வன்முறையைக் கையாள 200க்கும் அதிகமான பாலர்பள்ளி ஆசிரியர்களுக்கு 'காசா ரெளத்தா' பயிற்சியளித்துள்ளது.
மேலும், சென்ற ஆண்டு இதுவரை இல்லாத அளவில் 2,141 சிறுவர் துன்புறுத்தல் விவகாரங்களை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் சிறுவர் பாதுகாப்பு சேவைப் பிரிவு ஆராய்ந்தது.
இந்த எண்ணிக்கை, 2020ஆம் ஆண்டு பதிவானதைவிட 63 விழுக்காடு அதிகம்.
சரியாகக் கவனிக்கப்படாத பிள்ளைகள் குறித்த சம்பவங்களின் எண்ணிக்கை 910.
இது, 2020ல் பதிவானதில் இரு மடங்கிற்கும் அதிகம்.