இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துள்ளார்.
புதுடெல்லியில் நான்கு நாள் நடைபெறும் இந்திய கைப்பேசி மாநாட்டின் தொடக்க விழாவில் நேற்று பங்கேற்று உரையாற்றிய அவர், இந்தியாவை வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல 5ஜி சேவை வழிவகுக்கும் என்று கூறினார்.
"5ஜி சேவை கிராம மக்கள் முதல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும். இதை அனைவரிடத்திலும் கொண்டுசெல்ல வேண்டியது எங்களது பொறுப்பு. மேலும், 5ஜி தொழில்நுட்பம் தொலைத்தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும். இதன் அறிமுகம் 130 கோடி இந்தியர்களுக்கு தொலைத்தொடர்பு துறையின் பரிசு," என்றார் திரு மோடி.
இந்தியாவின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன்-ஐடியா ஆகியவை இந்த மாநாட்டில் 5ஜி இணையத்தின் முன்மாதிரியைக் காட்சிப்படுத்தின.
முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கோல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்பட 13 நகர்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
பல்வேறு புத்தாக்க முயற்சிகள் மூலம் தரவுத்தொகுப்பு கட்டுப்படியான விலையில் விற்கப்படுவதை நினைவுபடுத்திய திரு மோடி, "1 ஜிபி தரவுத்தொகுப்பு ரூ.300 என இருந்த விலை இப்போது ரூ.10ஆகக் குறைந்துள்ளது," என்றார்.
நிகழ்வில் பேசிய ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, 2023 இறுதிக்குள் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் 5ஜி சேவை கொண்டுசேர்க்கப்படும் என உறுதி தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் வழங்கப்படும் 4ஜி சேவையைக் காட்டிலும் 5ஜி சேவையின் வேகம் 10 மடங்கு கூடுதலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்தியாவின் தொழில்நுட்பக் கட்டமைப்பில் மிகப்பெரும் பாய்ச்சலை இது நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்வணிகம், கல்வி, மருத்துவம், போக்குவரத்து என பல்வேறு துறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை 5ஜி கொண்டுவரும் என்றும் 'மெட்டாவர்ஸ்' எனும் மெய்நிகர் உலகத் தொழில்நுட்ப உருவாக்கத்தில் இதன் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
பயனாளர்களிடையே 5ஜி பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, US$100-$150 விலையில் 5ஜி திறன்பேசியை வெளியிட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.