கொவிட்-19க்கு முன்பிருந்த பயணங்களில் 80 விழுக்காட்டை எட்டக்கூடும்
இந்த ஆண்டு இறுதிக்குள் சாங்கி விமான நிலையத்தில் செயல்பட விமான நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள விமானச் சேவைகளின் எண்ணிக்கை ஏற்கெனவே கொவிட்-19க்கு முந்தைய நிலையில் 80 விழுக்காட்டைவிட அதிகமாக உள்ளது. எனினும், எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் சீனா கையாளும் உத்திகள், சிங்கப்பூருக்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
விமான நிறுவனங்கள், சாங்கி விமான நிலையத்துடன் முன்கூட்டியே செய்துகொள்ளும் ஏற்பாட்டின் அடிப்படையிலும் முக்கியச் சந்தைகள், குறிப்பாக ஆசிய பசிபிக்கில் உள்ளவை தங்கள் எல்லைகளை மீண்டும் திறப்பதன் அடிப்படையிலும் அமைச்சு முன்னுரைப்புகளை வழங்குவதாக அவர் கூறினார்.
ஹாங்காங், தைவான், ஜப்பான் ஆகிய நாடுகள் எல்லைக் கட்டுப்பாடுகளை அண்மையில் தளர்த்தியுள்ளதால் ஆண்டிறுதியில் விமானச் சேவைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்-19க்கு முன்பு, சிங்கப்பூருக்கு வந்துசென்ற சுற்றுப்பயணிகளில் ஏறத்தாழ 20 விழுக்காட்டினர் சீன நாட்டவர்களாக இருந்தனர்.
"எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் சீனாவின் உத்தியை நாம் கவனிக்க வேண்டும். சீனா நமக்கு ஒரு முக்கியமான சந்தையாக உள்ளது.
"ஆற்றலைக் கருத்தில்கொண்டு நாங்கள் திட்டமிடுகிறோம். ஆனால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்," என்றார் திரு ஈஸ்வரன்.
ஆண்டிறுதியில் அதிக விமானச் சேவைகளைக் கையாள சாங்கி விமான நிலையத்தின் ஆற்றல் குறித்து பாசிர் ரிஸ் குழுத்தொகுதி எம்.பி. ஷாரேல் தாஹாவும் பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி எம்.பி. சக்தியாண்டி சுபாட்டும் கேட்ட கேள்விகளுக்கு திரு ஈஸ்வரன் பதிலளித்தார்.
இந்நிலையில், விமானப் போக்குவரத்துத் துறையில் ஊழியர்களைப் பணியமர்த்த நிறுவனங்கள் அனைத்துவிதமான முயற்சிகளையும் எடுத்து வருவதாக திரு ஈஸ்வரன் கூறினார்.
ஆண்டிறுதிக்குள் மேலும் 4,000 பேரை இத்துறையில் பணியமர்த்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வந்ததாக அவர் முன்னதாகக் கூறியிருந்தார். இதன்மூலம், கொவிட்-19க்கு முன்பிருந்த ஆள்பலத்தில் 90 விழுக்காட்டை எட்டும்.
"விமானப் போக்குவரத்துத் துறைக்கு ஆளெடுக்கும் நிறுவனங்களின் முயற்சிகள் தற்போது திட்டமிட்டபடி இடம்பெற்று வருகின்றன. விமானப் பயண மீட்சியை சாங்கி இதுவரை சிறப்பாக கையாண்டு வருகிறது," என்று திரு ஈஸ்வரன் கூறினார்.

