பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வின் தாக்கத்தைச் சமாளிக்கும் வகையில் குறைந்த வருமானக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் $30 பற்றுச்சீட்டு வழங்கப்பட உள்ளது. மொத்தமாக 600,000 பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சும் மக்கள் கழகமும் கூட்டாகத் தெரிவித்தன.
இந்தப் பற்றுச்சீட்டை தங்களது பயண அட்டையை நிரப்புவதற்கும் மாதாந்திரக் கட்டண அட்டையை நிரப்புவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மாதாந்திரக் குடும்ப தனிநபர் வருமானம் $1,600க்குக் கீழ் உள்ளோர் பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெறுவர். இது, இதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டைப் போன்றது.
பற்றுச்சீட்டு இரு கட்டங்களாக வழங்கப்படும். கடந்த ஆண்டு பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டைப் பெற்றவர்கள் இந்த ஆண்டும் அதே வருமான வரம்புத் தகுதியுடன் இருந்தால் பற்றுச்சீட்டு அறிவிப்புக் கடிதம் அவர்களுக்கு அனுப்பப்படும்.
தனியாக அவர்கள் விண்ணப்பிக்க வேண்டியது இருக்காது. தகுதிபெறும் குடும்பங்களுக்கு இவ்வாண்டு டிசம்பர் இறுதிக்குள் அறிவிப்புக் கடிதம் அனுப்பப்படும்.
இரண்டாம் கட்டம் 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கும். பற்றுச்சீட்டுக்குத் தகுதி இருந்தும் முதற்கட்டத்தில் பற்றுச்சீட்டு பெறாதவர்கள் அதற்காக இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது சமூக நிலையங்கள் மற்றும் சமூக மன்றங்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பம் தரலாம். இவ்வாறு இரு கட்டங்
களாக வழங்கப்படும் பற்றுச்சீட்டை 2024 மார்ச் 31க்குள் பயன்படுத்த வேண்டும். டிசம்பர் 26ஆம் தேதிமுதல் பெரியோருக்கான பேருந்து, ரயில் கட்டணம் 4 காசு முதல் 5 காசு வரை அதிகரிக்கிறது.
இதன்மூலம் போக்குவரத்து நிறுவனங்களின் வருமானம் ஆண் டுக்கு $50.3 மில்லியன் உயரும். இதில் எஸ்பிஸ் டிரான்சிட் ரயில் நிறுவனம் $7.4 மில்லியனும் எஸ்எம்ஆர்டி டிரெயின்ஸ் நிறுவனம் $15.4 மில்லியனும் பெறும்.
பேருந்து மற்றும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தில் கிடைக்கும் $27.5 மில்லியன் வரு மானம் நிலப் போக்குவரத்து ஆணையத்திற்குப் போய்ச் சேரும்.