உலு பாண்டானில் உள்ள டோவர் ஃபாரஸ்டின் கிழக்குப் பாதியில் ஏறக்குறைய 3,000 பிடிஓ வீடுகள் கட்டப்படும். மூன்று வீடமைப்புத் திட்டங்களின் அங்கமாக அவை இருக்கும். முதல் திட்ட வீடுகள் அடுத்த மாதம் விற்பனைக்குக் கொடுக்கப்படும்.
முதல் திட்டத்தில் 1,330 மூவறை, நாலறை வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிகள் எழும்.
அந்த அடுக்குமாடிகள், பக்கத்தில் இருக்கும் உலு பாண்டான் கால்வாய், அப்பால் இருக்கும் தரை வீடுகளுடன் கூடிய ஹாலண்ட் குரூவ் குடியிருப்புப் பேட்டை ஆகியவற்றைக் கூடுமானவரை நன்கு பார்க்க ஏதுவாக பலவித உயரங்களில் கட்டப்படும்.
உலு பாண்டனைப் பார்த்தபடி இருக்கும் அடுக்குமாடிகள் உயரம் குறைவாகவும் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் அருகே அமையும் அடுக்குமாடிகள் உயரமானவையாகவும் இருக்கும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று தெரிவித்தது.
தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் நேற்று தோ பாயோ வீவக மையத்தில் நடந்த வீவக நிகழ்ச்சியில் இந்த வீட்டுத் திட்ட விவரங்களை வெளியிட்டார்.
சமூகத் தோட்டங்களுக்கு இடம் அளிக்கும் வகையில் அடுக்குமாடிகள் மொட்டை மாடிகளைக் கொண்டு இருக்கும். கூரை தோட்டங்களும் இருக்கும்.
அடுத்த மாதம் விற்பனைக்குக் கொடுக்கப்படும் வீடுகள், டோவர் எம்ஆர்டி நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்திருக்கும்.
அது கார் புழக்கம் குறைவான வீவகவின் முதலாவது வட்டாரமாகவும் திகழும். குடியிருப்புப் பேட்டையில் சரிவான மழைத் தோட்டம் இருக்கும். இதன் தரை மட்டம் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட்டைவிட தாழ்வாக இருக்கும் என்று கழகம் கூறியது.
வீட்டின் விலை, கட்டி முடிக்கப்படும் தேதி போன்ற விவரங்கள், வீடுகள் விற்பனைக்குக் வரும்போதுதான் தெரியவரும்.
உலு பாண்டான் குடியிருப்பு பேட்டையில் சுமார் 5 ஹெக்டர் பசுமை வளம் இருக்கும். அதில் 1.2 ஹெக்டர் பரப்புள்ள ஒரு பூங்காவும் உள்ளடங்கும்.
அந்தப் பூங்கா இப்போதைய இயற்கை நீரோடையுடன் தனக்கே உரிய உயிரினங்களில் பெரும்பாலானவற்றை கட்டிக்காக்கும்.
உலு பாண்டான் கால்வாய் நெடுகிலும் சென்று பல்வேறு பகுதிகளை இணைக்கும் 1.6 கி.மீ. நீளமுள்ள ஒரு பாதையும் அதில் உள்ளடங்கும்.
600 மீட்டர் நீளத்திற்கு மெதுவோட்டப் பாதை ஒன்று, 34வது மாடி ஆகாய பாலங்கள் வழியாக மூன்று புளோக்குகளை இணைக்கும் வகையில் அமைந்திருக்கும்.
சில்லறைக் கடைகள், உணவகங்கள், பேரங்காடிகள், விளையாட்டுத் திடல்கள், தோட்ட நடைபாதைகள், சமூக அரங்கம் எல்லாம் இதர வசதிகளில் உள்ளடங்கும்.
உலு பாண்டானில் சில இடங்களில் 40 மீட்டர் அகலத்துடன் கூடிய பசுமைப்பாதை ஒன்றை உருவாக்கும் நோக்கத்துடன் பொதுப் பயனீட்டுக் கழகம், தேசிய பூங்கா வாரியம் ஆகியவற்றுடன் சேர்ந்து வீவக செயல்பட்டு வருகிறது. உலு பாண்டான் கால்வாயும் வெள்ளம் வராத வகையில் மேம்படுத்தப்படும்.
குவீன்ஸ்டவுன் முதிர்ச்சி அடைந்த பேட்டையில் அமைந்து இருக்கும் உலு பாண்டான், கார் புழக்கம் குறைந்த வட்டாரமாக வகைப்படுத்தப்பட்டுள்ள நான்கு வீவக பேட்டைகளில் ஒன்றாகும்.
அங்கு பொதுப் போக்குவரத்து, நடைபாதைகள், சைக்கிளோட்டப் பாதைகள் பலவற்றுக்கும் திட்டமிடப்படுகின்றன.
இத்தகைய பேட்டைகளில் கார் பேட்டைகளின் எண்ணிக்கையை வீவக குறைக்கும். இதனால் பொது வசதிகளுக்கும் பசுமை வளத்திற்கும் அதிக நிலப் பகுதிகள் கிடைக்கும். வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான இடங்களைப் பொறுத்தவரை குடியிருப்பாளர்களுக்குத்தான் முன்னுரிமை இருக்கும்.

