இந்தியாவின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தையும் விஸ்தாரா விமான நிறுவனத்தையும் இணைக்கும் சாத்தியம் தொடர்பில் இந்தியாவின் டாடா குழுமத்துடன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நேற்று உறுதிப்படுத்தியது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 விழுக்காட்டுப் பாத்தியதையை டாடா நிறுவனம் வாங்கிவிட்டதாக இந்திய ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தச் சூழலில் எஸ்ஐஏ நிறுவனம், பேச்சு வார்த்தையை உறுதிப்படுத்தி இருக்கிறது.
விஸ்தாரா நிறுவனத்தில் டாடா நிறுவனத்திற்கு 51 விழுக்காட்டு பங்கு இருக்கிறது. எஞ்சிய 49% பங்கு எஸ்ஐஏ வசம் உள்ளது.
எஸ்ஐஏவுக்கும் டாடாவுக்கும் இடையில் இப்போதைய பங்காளித்துவ உறவை ஆழமாக்கும் நோக்கத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
அதில் விஸ்தாராவையும் ஏர் இந்தியாவையும் ஒருங்கிணைக்கும் வாய்ப்பு குறித்தும் பேசப்படலாம் என்று சிங்கப்பூர் பங்குச் சந்தையிடம் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் எஸ்ஐஏ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதுவரையில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இடையில் திட்டவட்டமான நிபந்தனைகள் எதுவும் ஒப்புக்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்தாரா, ஏர் இந்தியாவுடன் ஐக்கியமாகும் பட்சத்தில் அதில் எஸ்ஐஏவுக்கு எவ்வளவு பங்கு இருக்கும் என்பதோ, பல சிரமங்களை எதிர்நோக்கும் ஏர் இந்தியா குழுமத்திற்கு புதிதாக பணம் எதுவும் தேவைப்படுமா என்பதும் தெரியவில்லை.
எந்தவோர் உடன்பாடும் சிங்கப்பூரின் போட்டித்திறன் கண்காணிப்பு அமைப்பிடம் இருந்தும் இந்திய அதிகாரிகளிடம் இருந்தும் அனுமதியைப் பெற வேண்டி இருக்கும் என்பதை அறிக்கையில் எஸ்ஐஏ நிறுவனம் சுட்டியது.
விஸ்தாரா நிறுவனம் 2013ல் தோற்றுவிக்கப்பட்டது. அதிவேகமாக வளர்ந்து வரும் இந்திய விமானப் போக்குவரத்து தொழில்துறையில் எஸ்ஐஏ குழுமம் ஈடுபட அது வழிவகுக்கிறது.
இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மிக வலுவாக இருக்கிறது. இந்தியர்கள் அனைத்துலக அளவிலும் அதிகமாகப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்தப் பயணங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா 2024ஆம் ஆண்டு வாக்கில் உலகின் ஆகப் பெரிய விமானப் போக்குவரத்துச் சந்தையாக ஆகும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் கணித்து இருக்கிறது.
இந்தியா, ஏற்கெனவே உலகின் ஆகப் பெரிய உள்நாட்டு விமானப் பயணச் சந்தையாக ஆகிவிட்டது என்று 2021ஆம் ஆண்டு இந்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
எஸ்ஐஏ நிறுவனம் விஸ்தாரா தொழில் பாத்தியதையைத் தனது பல பயண மைய உத்தியின் முக்கியமான ஓர் அங்கமாக கருதுகிறது.
எஸ்ஐஏ நிறுவனம் சிங்கப்பூரை வலுவான மையமாகக் கொண்டு செயல்படுகிறது. அதற்கு உறுதுணையாகத் திகழும் முக்கியமான தரப்புகளை எட்டுவதற்கு அந்தப் பல மைய உத்தி எஸ்ஐஏவுக்கு உதவுகிறது.