மலேசியாவில் இருந்து பிராய்லர் கோழிகள் நேற்று பிற்பகலில் சிங்கப்பூர் சில்லறை விற்பனைக் கடைகளுக்குத் திரும்பின.
உள்நாட்டுப் பற்றாக்குறை காரணமாக மலேசியா கோழி ஏற்று மதிக்கு நாலரை மாதங்களுக்கு முன் தடை விதித்தது.
சிங்கப்பூருக்குத் தேவையான கோழிகளில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு கோழிகள் அப்போது மலேசியாவில் இருந்து இங்கு இறக்குமதியாயின.
பிராய்லர் கோழிகள் என்பவை, இறைச்சிக்காகவே வளர்க்கப்படுபவை. சிங்கப்பூரில் பேரங்காடிகளில் காணப்படும் மிகப் பிரபலமான கோழிகள் பிராய்லர் கோழிகள்தான்.
மலேசியாவில் இருந்து இறக்கு மதியாகும் கோழிகளில் இந்த வகை கோழிகளே மிக அதிகம்.
மலேசியாவில் இருந்து மாதம் ஒன்றுக்கு சுமார் 1.8 மில்லியன் கோழிகள் சிங்கப்பூருக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியா தடை விதித்ததற்கு முன்பு கோழி இறக்குமதி மாதம் 3.6 மில்லியனாக இருந்தது.
இயூ டீ கடையில் இருப்பு வைக்கப்பட்ட சகூரா உரித்தகோழிகள் நேற்று ஒன்று $14.80க்கு விற்கப்பட்டது. அதன் எடை 1.3 கிலோவில் இருந்து 1.5 கிலோ வரை இருந்தது.
மலேசியாவில் இருந்து நேற்று வரம்புக்குட்பட்ட அளவிலேயே கோழிகள் இறக்குமதியானதாகத் தெரிகிறது. ஃபேர்பிரைஸ் செயலியைப் பார்க்கையில், அதனுடைய 10 கடைகளிலும் இருப்பு குறைவாக இருந்தது தெரிந்தது.
மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பிராய்லர் கோழிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் சிங்கப்பூரின் ஈரச்சந்தைகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

