ஆந்திராவின் ஹைதராபாத் காவல்துறை ரூ. 900 கோடி (S$170 மில்லியன்) முதலீட்டு தில்லுமுல்லு மோசடிக் கும்பலை முடக்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த மோசடியில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் தைவானியர், சீனர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகஆந்திரக் காவல்துறை தெரிவித்தது.
ஏராளமாக லாபம் கிடைக்கும் என்று நம்பி லட்சக்கணக்கான மக்கள் அந்த மோசடி வலையில் சிக்கி பணத்தைப் பறிகொடுத்துள்ளதாக நம்பப்படுகிறது.
ஹைதராபாத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அந்த நகர காவல்துறை ஆணையர் சி.வி ஆனந்த், இந்த மோசடியில் ரஞ்சன் மணி கார்ப்பரேஷன், கேடிஎஸ் ஃபோரெக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற இரண்டு நிறுவனங்கள் மிக முக்கிய பங்காற்றி இருப்பதாகக் கூறினார்.
அந்த இரண்டு நிறுவனங்களும் பொது மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையை அந்நியச் செலாவணியாக மாற்றி பிறகு அதை சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு அனுப்ப உதவி இருக்கின்றன என்று நம்பப்படுகிறது.
இந்த மாபெரும் மோசடியின் காரணகர்த்தா என்று நம்பப்படுபவர் சீனாவைத் தளமாகக்கொண்டு செயல்பட்டுள்ளார்.
பல நாட்டினரின் உதவியுடன் அவர் இந்தியாவில் கைவரிசை காட்டி இருக்கிறார் என்பது புலன்விசாரணை மூலம் தெரியவந்து இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்தப் பெரும் மோசடி விவகாரத்தை அமலாக்க இயக்குநரகம், மத்திய புலன்விசாரணைப் பிரிவு ஆகியவற்றிடம் தெரிவித்து அவற்றின் உதவியுடன் பல கோணங்களிலும் புலன்விசாரணை நடத்தப்போவதாக ஆந்திர காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
ஆந்திராவின் தர்னாகா என்ற வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், LOXAM என்ற செயலியில் தான் ரூ. 1.60 லட்சம் முதலீடு செய்ததாகவும் ஆனால் அந்தப் பணம் பறிபோய்விட்டதாகவும் சில மாதங்களுக்கு முன் இணையக் குற்றச்செயல் காவல்துறையிடம் புகார் செய்தார். அதையடுத்து அதிகாரிகள் பெரியளவில் புலன்விசாணைகள் தொடங்கினர்.
அதன்விளைவாக இந்தப் பிரம்மாண்ட மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

