எதிர்பார்ப்பை விஞ்சியதால் மந்தநிலை ஏற்படாமல் தவிர்ப்பு
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் சிங்கப்பூர் பொருளியல் எதிர்பார்ப்பை விஞ்சி, 4.4% வளர்ச்சி கண்டது. இதனால், பொருளியல் மந்தநிலை ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
இருப்பினும், அடுத்து வரும் மாதங்களில் பொருளியல் நிலவரம் ஏற்ற இறக்கமாக இருக்கலாம் என்று பொருளியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
நான்காம் காலாண்டில் பொருளியல் சுருங்கலாம் என்றும் அடுத்த ஆண்டில் வளர்ச்சி குறைவாகவே இருக்கலாம் என்றும் பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆண்டு அடிப்படையில், கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 4.5 விழுக்காடாக இருந்த பொருளியல் வளர்ச்சி, அதனையடுத்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 4.4% எனச் சற்றே மெதுவடைந்தது.
ஆனாலும், காலாண்டு அடிப்படையில் பொருளியல் 1.5% வளர்ச்சி கண்டதால், பொருளியல் மந்தநிலைக்குச் செல்வது தவிர்க்கப்பட்டது. முன்னதாக, 2022 முதல் காலாண்டைவிட இரண்டாம் காலாண்டில் பொருளியல் 0.2% சரிவுகண்டிருந்தது.
தொடர்ந்து இரு காலாண்டுகளாகப் பொருளியல் சுருங்கும் பட்சத்தில் அது மந்தநிலையை எட்டிவிட்டதாகக் கருதப்படும்.
மூன்றாம் காலாண்டிற்கான முன்னோடித் தரவுகளின் அடிப்படையில், சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 4.3% வளர்ச்சி கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால், இவ்வாண்டிற்கான ஒட்டுமொத்த பொருளியல் வளர்ச்சி 3 முதல் 4 விழுக்காட்டிற்குள் இருக்கும் என்று பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, இவ்வாண்டில் நாட்டின் பொருளியல் 3% முதல் 5% வளர்ச்சியை எட்டலாம் என்று கணித்திருந்த வர்த்தக, தொழில் அமைச்சு, பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதனை 3%-4% எனக் குறைத்துவிட்டது.
சென்ற ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 4.5 விழுக்காடாக இருந்த தங்குமிடம், உணவு, நிர்வாகம் மற்றும் ஆதரவு, சொத்துச் சந்தை ஆகிய சேவைகள் துறையின் வளர்ச்சி, இவ்வாண்டின் அதே காலாண்டில் 9.2 விழுக்காடாக உயர்ந்தது. நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் அத்துறையின் வளர்ச்சி 7.6 விழுக்காடாகப் பதிவானது.
ஒட்டுமொத்தத்தில், சேவைகள் துறை 6.1% வளர்ச்சி கண்டது. இரண்டாம் காலாண்டில் இந்த விகிதம் 4.8 விழுக்காடாக இருந்தது.
அத்துறையின் எல்லாப் பிரிவுகளும் வளர்ச்சி அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், உற்பத்தித்துறையின் வளர்ச்சி மெதுவடைந்தது. ஆண்டு அடிப்படையில் பார்க்கும்போது, இரண்டாம் காலாண்டில் 5.7 விழுக்காடாக இருந்த அத்துறையின் வளர்ச்சி, மூன்றாம் காலாண்டில் 1.5 விழுக்காட்டிற்கு இறங்கியது. காலாண்டு அடிப்படையில் பார்க்கையில், இரண்டாம் காலாண்டைவிட அத்துறை 3.3% சுருங்கியது.

