'உருமாறிய கிருமியின் வீரியம் இதுவரை குறைவாகவே உள்ளது'
சிங்கப்பூரில் 'எக்ஸ்பிபி' வகை ஓமிக்ரான் கிருமியுடன் தொடர்புடைய மரணங்களோ கடுமையான நோய் பாதிப்போ இதுவரை ஏற்படவில்லை. ஆனால் இந்த உருமாறிய கிருமியால் அண்மைக் காலமாக சிங்கப்பூரிலும் மற்ற நாடுகளிலும் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இருப்பினும் கடந்த மாதத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் இருந்தும் உயிர்வாயு தேவைப்படுவோரிடம் இருந்தும் எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரியில் இந்தப் புதிய வகைக் கிருமி கண்டுபிடிக்கப்படவில்லை.
எனினும், இத்தகையோரிடம் புதியவகை கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி பிறகுதான் தெரியவரும். கடுமையான தொற்று அறிகுறிகள் தென்பட்டதற்கும் 'எக்ஸ்பிபி' வகை கிருமி தொற்றியது உறுதிப்படுத்தப்படுவதற்கும் இடையே நேர இடைவெளி இருப்பதே இதற்குக் காரணம்.
'எக்ஸ்பிபி' துணைத் திரிபு எளிதில் பரவக்கூடியது என்றாலும், முந்தைய வகை கிருமிகளுடன் ஒப்பிடுகையில் இதன் வீரியம் குறைவாக இருப்பதாகவே தெரிகிறது என்று சிங்கப்பூரின் மருத்துவச் சேவை பிரிவு இயக்குநர் கென்னத் மாக் கூறினார்.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் இணைப் பேராசிரியர் மாக்கும் நேற்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து தற்போதைய கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம் குறித்து விளக்கம் தந்தனர்.
எக்ஸ்பிபி வகை உருமாறிய கிருமி முந்தைய கிருமி வகைகள் போல் இல்லாமல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தாமல் இருந்தால் மருத்துவமனை வளங்கள் மீதான சுமை குறைவாக இருக்கும் என்று பேராசிரியர் மாக் தெரிவித்தார். இருப்பினும், தற்போது எக்ஸ்பிபி குறித்த முழு பரிசோதனை முடிவுகள் இல்லை என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூரில் புதியதொரு கொவிட்-19 தொற்று அலை வீசி வருகிறது. புதிதாக 9,000க்கும் அதிகமானோரிடம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சுக்கு நேற்று முன்தினம் தெரியப்படுத்தப்பட்டது.
அக்டோபர் 3 முதல் 9ஆம் தேதி வரை உள்ளூரில் பதிவான தொற்று பாதிப்புகளில் 'எக்ஸ்பிபி' துணைத் திரிபு 54 விழுக்காடு பங்கு வகித்தது.
அதற்கு முந்தைய வாரத்தில் உள்ளூர் தொற்று பாதிப்புகளில் 'எக்ஸ்பிபி' 22 விழுக்காடு பங்கு வகித்தது.
'எக்ஸ்பிபி' வகைக் கிருமி இந்தியா, ஆஸ்திரேலியா, பங்ளாதேஷ், டென்மார்க், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஆகஸ்ட் மாதம் முதல் பதிவாகியுள்ளது.
நேற்று முன்தின நிலவரப்படி 562 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 44 பேருக்கு உயிர்வாயு தேவைப்படுகிறது; தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒன்பது பேர் உள்ளனர்.
மோசமான உடல்நிலைக்கு உள்ளாகியோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. நோயாளிகளில் பெரும்பாலானோர், குறிப்பாக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர், தொண்டை வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளையே கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, தடுப்பூசி போட்டுக்கொண்டோரும் எக்ஸ்பிபி வகைக் கிருமியால் பாதிக்கப்படலாம் என்றும் மொத்த கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 17% மறுமுறை தொற்று ஏற்பட்டு உள்ள சம்பவங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனால் தகுதிபெறுவோர் தங்களின் கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் செய்திகள் - பக்கம் 2, 3

