பயணி ஒருவரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த 68 வயது கிராப் ஓட்டுநர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார்.
அவரது காருடன் லாரியும் பேருந்தும் சம்பந்தப்பட்ட விபத்து ஞாயிறு பிற்பகல் அங் மோ கியோ அவென்யூ 5ம் அங் மோ கியோ இண்டஸ்ட்ரியல் பார்க் 2ம் சந்திக்கும் சாலையில் விபத்து நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மாண்டவர் கிராப் நிறுவனத்துடன் தம்மை தனியார் வாடகை ஓட்டுநர் என்று பதிவு செய்திருந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
அவர் தமது காரை வலப்பக்கம் திருப்பியபோது எதிர்த்திசையில் வந்த லாரி, கார்மீது மோதியதாகவும் அது கூறியது.
இருப்பினும் இந்த விபத்தில் பேருந்து எவ்வாறு சம்பந்தப்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் நினைவு இழந்த நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அவர் மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விபத்து குறித்து பிற்பகல் 1 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் கிராப் காரில் பயணம் செய்த 33 வயதுப் பெண்ணும் 55 வயது லாரி ஒட்டுநரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
லாரி ஓட்டுநரும் 65 வயது பேருந்து ஓட்டுநரும் விசாரணையில் உதவிவருவதாகவும் அது கூறியது.
கிராப் ஓட்டுநரின் மரணம் இந்த அக்டோபரில் நிகழ்ந்திருக்கும் 3வது வேலையிட மரணம்; இந்த ஆண்டில் நிகழ்ந்திருக்கும் 40வது வேலையிட மரணம். கடந்த ஆண்டு முழுவதும் 37 வேலையிட மரணங்களே பதிவாகியிருந்தன.

