சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த இருதரப்புப் பணிக்குழு உருவாக்கம்
பசுமைப் பொருளியலில் ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்தும் வகையில், சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் முக்கிய உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளன.
சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா பசுமைப் பொருளியல் உடன்பாட்டின்கீழ், சுங்கவரியையும் வணிகத் தடைகளையும் குறைக்கும் நோக்கில் சுற்றுச்சூழல் சார்ந்த பொருள்கள் மற்றும் சேவைகளின் பட்டியலை உருவாக்குவது போன்ற 17 கூட்டுமுயற்சிகளை இருநாடுகளும் தொடங்கும்.
பசுமை சார்ந்த துறைகளில் வணிக, முதலீடுகளை ஊக்குவிக்கும் பங்காளித்துவம், மாற்றுப் புரதங்கள், லித்தியம் மின்கல மறுசுழற்சி போன்ற துறைகளில் ஆய்வு ஒத்துழைப்பு உள்ளிட்டவையும் அந்தக் கூட்டுமுயற்சிகளில் அடங்கும்.
ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பராவில் நேற்று இடம்பெற்ற ஏழாவது சிங்கப்பூர் - ஆஸ்திரேலியா தலைவர்கள் சந்திப்பில், பிரதமர் லீ சியன் லூங் மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் முன்னிலையில் இந்த உடன்பாடு கையெழுத்தானது.
பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் லீ, இருநாடுகளும் கரிம வெளியீடற்ற நாடுகளாக மாற இந்த உடன்பாடு துணைபுரியும் என்றும் பசுமை சார்ந்த துறைகளில் வளர்ச்சியை ஊக்குவித்து, வேலைகளை உருவாக்கும் என்றும் சொன்னார்.
"நாடுகளுக்கு இடையே இத்தகைய உடன்பாடு எட்டப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. பருவநிலை மாற்றமானது உலகளாவிய பிரச்சினை என்பதால் இதுபோன்று ஒத்துழைப்பதில் பிற நாடுகளுக்கு இந்த உடன்பாடு ஒரு முன்னோடியாக அமையும் என நம்புகிறோம்," என்றார் திரு லீ.
கேன்பராவில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தில் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்கும் ஆஸ்திரேலிய வர்த்தக, சுற்றுலாத்துறை அமைச்சர் டான் ஃபேரலும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
இந்த உடன்பாட்டின்கீழ், வணிகம் மற்றும் முதலீடு, தரநிலைகள் மற்றும் இணக்கம், பசுமை மற்றும் நிலைமாற்ற நிதி, கரிமச் சந்தைகள், தூய எரிசக்தி, கரிமநீக்கம் மற்றும் தொழில்நுட்பம், தேர்ச்சிகள் மற்றும் செயல்திறன்கள், தொழில் ஈடுபாடுகள் மற்றும் பங்காளித்துவங்கள் ஆகிய ஏழு துறைகளில் ஒத்துழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகளாவிய பிரச்சினையான பருவநிலை மாற்றத்திற்கு உலகளாவிய தீர்வுகள் காணப்பட வேண்டியது அவசியம் என்றார் திரு அல்பனிஸ். சிறந்த நட்பு நாடுகளாகத் திகழும் சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே கையெழுத்தானது போன்ற உடன்பாடுகள், உலகிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் என்பதால் முக்கியமானவை என்றும் அவர் சொன்னார்.
நம்பகமான பங்காளிகளாக விளங்கும் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் விநியோகத் தொடரை வலுப்படுத்துவது போன்ற புதிய உத்திபூர்வ துறைகளில் ஒத்துழைப்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றன.
இதற்காக கடந்த மாதம் இருதரப்புப் பணிக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது என்றும் அக்குழு இருநாடுகளுக்கும் இடையே அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தை உறுதிசெய்வதற்கான வழிவகைகளை ஆராயும் என்றும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.
'வெள்ள நிவாரணப் பணிகளில் சிங்கப்பூர் ஆயுதப்படை'
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மாநிலங்களில் வெள்ள நிவாரணப் பணிகளுக்குக் கைகொடுக்க சிங்கப்பூர் ஆயுதப்படை தயாராகவுள்ளது என்று திரு லீ தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூர் ஆயுதப்படையினர் பயிற்சிபெற அந்நாடு தொடர்ந்து, தாராள ஆதரவை வழங்கி வருவதை அவர் மெச்சினார். கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூர் ஆயுதப்படையின் பயிற்சி மீண்டும் முழுவதுமாகத் தொடங்கியுள்ளது.

