பொன்மணி உதயகுமார்
அறிவாற்றலுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிப்பதால், தொழில்நுட்பம் அல்லது சமூக சேவை சார்ந்த வேலைகளுக்கான மதிப்பு குறைவாக இருக்கிறது என்றும் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கும் தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) பட்டதாரிகளுக்கும் உள்ள வருமான இடைவெளி அதிகரிப்பது வருத்தம் அளிக்கும் போக்கு என்றும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்திருக்கிறார்.
பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் சராசரி வருமானம், 'ஐடிஇ' பட்டதாரிகளைக் காட்டிலும் ஏறக்குறைய இரண்டு மடங்காக இருப்பதாக நிதியமைச்சருமான திரு வோங் குறிப்பிட்டார்.
இந்த வருமான இடைவெளி, அவர்களின் வாழ்நாளில் அதிகரித்துக்கொண்டே போவதாகவும் அவர் சொன்னார்.
சிங்கப்பூர் பொருளியல் சங்கம், 'ரீஜன்ட் சிங்கப்பூர்' ஹோட்டலில் நேற்று ஏற்பாடு செய்திருந்த 'பொருளியல் கொள்கை கருத்தரங்கு 2022' நிகழ்வில் பங்கேற்றுப் பேசியபோது, அவர் இவ்வாறு சொன்னார்.
தொழில்நுட்பம் அல்லது சமூக சேவை சார்ந்த வேலைகள் அதிகம் உள்ளூர்த் துறைகளில்தான் இருக்கின்றன என்ற திரு வோங், அத்துறைகளில் உள்ள வேலைகளை மறுசீரமைப்பது, பணிபுரியும் ஊழியர்களின் திறனை மேம்படுத்துவது, வாழ்க்கை தொழில் வளர்ச்சியை உறுதிசெய்வது போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த முயற்சிகள் ஏற்கெனவே அரசாங்க ஆதரவுடன் செயல்படும் பாலர் பள்ளிகளில் தொடங்கி விட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர்களுக்குக் கூடுதல் சம்பளம் வழங்குவதையும் தாண்டி, அவர்கள் தொடர்ந்து தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, சிறப்புத் தேர்ச்சிகளைக் கொண்ட மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்வதில் அல்லது தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்க பயிற்சிபெறுவதில் ஆசிரியர்களுக்கு அரசாங்கம் ஆதரவளித்து வருவதை துணைப் பிரதமர் வோங் பகிர்ந்துகொண்டார்.
இம்மாதிரியான முயற்சிகளை கல்வித்துறையில் மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஒரு நிறுவனத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் எத்தனை பேர் இருக்கலாம் என்பதற்கான வரம்பு, தகுதிபெறும் உள்ளூர் சம்பளத்தை அதிகரிப்பது, சம்பள உயர்வுத் திட்டம் போன்றவை வருமான இடைவெளியைக் குறைக்க அல்லது தடுக்க அரசாங்கம் ஏற்கெனவே எடுத்துவரும் முயற்சிகளில் சில.
அவற்றை மேற்கோள்காட்டிப் பேசிய திரு வோங், சிங்கப்பூரர்கள் அனைவரும் இந்த முயற்சிக்குப் பங்களிக்க வேண்டும் என்று கூறினார்.
தொழில்நுட்பம் அல்லது சமூக சேவை வழங்கும் துறைகளில் இருந்து பெறப்படும் பொருள்களுக்கும் சேவைகளுக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த தயாராக இருப்பதன்மூலம் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கலாம் என்றார் துணைப் பிரதமர்.
அத்துடன், கல்வியில் சாதிப்பவர்களை மட்டும் உயர்வாகக் கருதாமல், திறன்கள் மூலம் சிறந்து விளங்குபவர்களுக்கும் தகுந்த மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எந்தத் துறையானாலும், எந்தப் பாதையை ஒருவர் தேர்ந்து எடுத்தாலும், உரிய வெகுமதியும் அங்கீகாரமும் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்றும் திரு வோங் வலியுறுத்தினார்.

