மலேசியாவில் பொதுத் தேர்தல் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும். அதனைத் தொடர்ந்து 14 நாள் தேர்தல் பிரசாரம் இடம்பெறும்.
மாமன்னர் அப்துல்லா அகமது ஷாவின் ஒப்புதலைப் பெற்ற பிறகு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அக்டோபர் 10ஆம் தேதி அறிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப் பட்ட 60 நாள்களுக்குள், பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அரசியல் கொந்தளிப்பு திடீர் தேர்தலுக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்தத் தேர்தலில் 20 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் ஒரு புதிய அரசாங்கத்திற்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பருவமழைக் காலத்தில் தேர்தல் நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. வழக்கமாக நவம்பர் நடுப்பகுதியிலிருந்து கடும் மழையும் வெள்ளமும் அங்கு ஏற்படும்.
222 நாடாளுமன்ற இடங்களுடன் பகாங், பெர்லிஸ், பேராக் மாநில சட்டமன்ற இடங்களுக்கும் மக்கள் வாக்களிப்பர். கொவிட்-19 காரணமாக இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட சாபாவின் புகாயா தொகுதிக்கும் அன்று இடைத்தேர்தல் நடைபெறும்.
இந்தத் தேர்தலை நடத்துவதற்கான செலவு, கடந்த பொதுத் தேர்தல் செலவைவிட இரு மடங்காக இருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
சாபா, சரவாக், மலாக்கா, ஜோகூர் ஆகிய மாநிலங்கள் அனைத்தும் கடந்த ஈராண்டுகளில் மாநிலத் தேர்தல்களை நடத்தியுள்ளன. எதிர்க்கட்சியான பக்கத்தான் ஹரப்பான், பாஸ் தலைமையிலான மேலும் ஆறு மாநிலங்கள் பருவ மழைக் காலத்துக்கு முன்னதாக சட்டமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை எனக்கூறியுள்ளன.
"இந்தத் தேர்தலுக்கு 1.01 பில்லியன் ரிங்கிட் ($304 மி. சிங்கப்பூர் வெள்ளி) தேவைப்படுகிறது," என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் கனி அப்துல் சாலே தெரிவித்தார். 2018ஆம் ஆண்டு தேர்தல் செலவு 500 மில்லியன் ரிங்கிட்டாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ராணுவம், காவல்துறை போன்ற பாதுகாப்பு வீரர்கள் முன்கூட்டியே நவம்பர் 15 அன்று வாக்களிப்பர்.
கடந்த 2018 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் உறுதியற்ற தன்மையை அடிக்கோடிட்டுக்காட்டும் வகையில், நான்கு ஆண்டுகளில் மலேசியாவின் மூன்றாவது பிரதமராக இஸ்மாயில் பதவி ஏற்றார்.
கடந்த தேர்தலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட அம்னோ கட்சி, அரசு நிதியான 1எம்டிபியுடன் தொடர்புடைய பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தது.
அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக், பதவி இழந்த நிலையில் இந்நிதி தொடர்பான பில்லியன் கணக்கான ரிங்கிட் ஊழலில் சிக்கி, நீதிமன்ற விசாரணையில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 12 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.
கொரோனா கொள்ளைநோயாலும் அரசியல் கொந்தளிப்புகளாலும் பல சவால்களை எதிர்கொண்டிருக்கும் மலேசியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய தேர்தலாக எதிர்வரும் பொதுத் தேர்தல் கருதப்படுகிறது.
இத்தேர்தலில் 97 வயதான முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது உள்ளிட்டோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஸ், அம்னோ கட்சிகள் தனித்தனிக் கூட்டணிகளாகப் போட்டியிடுவதால் மலாய் இன வாக்குகள் பிரியும் என அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே, அக்டோபர் 10 அன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று கிள்ளான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சான்டியாகோ வழக்குத் தொடுத்துள்ளார்.
மேலும் செய்தி பக்கம் 9

