தீபாவளி வாரயிறுதியில் லிட்டில் இந்தியாவில் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அதிகமான காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். போக்குவரத்தைக் கடுப்படுத்தவும் வாகனமோட்டிகளுக்கு உதவவும் குறிப்பிட்ட சாலைகளிலும் சாலைச் சந்திப்புகளிலும் துணைக் காவல் அதிகாரிகள் நிறுத்தப்படுவர்.
வாகனமோட்டிகள் மாற்று வழிகளில் பயணம் செய்ய அறிவுறுத்தப் படுகின்றனர். சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிரான கடுமையான நடவடிக்கைஎடுப்படும் என்று காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை சுட்டியது.
மது அருந்தக் கட்டுப்பாடு
லிட்டில் இந்தியாவில் இன்று இரவு 10.30 மணி முதல் செவ்வாய்க்கிழமை 25ஆம் தேதி காலை 7 மணி வரையில் பொது இடங்களில் மது அருந்த அனுமதிக்கப்படாது என்றும் அறிக்கை கூறியது. அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பிறகு மது விற்கும் கடைகளின் மது விற்பனை உரிமம் ரத்தாகலாம். முன்னைய மதுக் கட்டுப்பாடு (விநியோகம் மற்றும் நுகர்வு) சட்டம் 2015ன் கீழ், லிட்டில் இந்தியா மதுக் கட்டுப்பாட்டு வட்டாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் கீழ், மது அருந்தக்கூடாத நேரத்தில் பொது இடத்தில் மதுபானம் அருந்துவோருக்கு கூடுதல் தண்டனைகள் விதிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் $1,500 வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் குற்றம் புரிவோருக்கு நான்கரை மாதங்கள் வரை சிறை, $3,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.வாணவேடிக்கை, பட்டாசு
தீப்பொறிகளை வெளியிடும் பட்டாசு போன்ற வெடிபொருள்களுக்கு எதிராகவும் பொதுமக்கள் எச்சரிக்கப்படுகின்றனர். குற்றம் புரிவோருக்கு ஓராண்டு வரை சிறை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறை, அல்லது அபராதம், அல்லது பிரம்படிகள் அல்லது இவை கலந்து விதிக்கப்படலாம்.
சட்டவிரோதமாக வாணவேடிக்கை வைத்திருப்போர், வெடிப்போர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குற்ற வாளிக்கு ஈராண்டுகள் வரை சிறை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். வாணவேடிக்கை இறக்குமதி செய்வதும் கடுமையான குற்றமாகும்.
தீபாவளிக்கு கடைசி நேரத்தில் பொருள் வாங்குவோரும் வெளி நாட்டு ஊழியர்களும் ஞாயிறு அன்று பெருந்திரளாகக் கூடுவர் என்று கடைக்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்கள் இரவு வரை காத்திருக்காமல், காலை, பிற்பகலில் வந்தால் கூட்டத்தைத் தவிர்க்கலாம் என்று சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கத்தின் தலைவரான திரு குர்சரண் சிங் தெரிவித்தார்.