உணவு, சேவைகளுக்கான செலவு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், சிங்கப்பூரில் மூலாதாரப் பணவீக்கம், கடந்த மாதம் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியது.
தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகளை உள்ளடக்காத மூலாதாரப் பணவீக்கமானது, ஆண்டு அடிப்படையில் சென்ற மாதம் 5.3 விழுக்காடாக உயர்ந்தது. அதற்கு முந்திய ஆகஸ்ட் மாதத்தில் இது 5.1 விழுக்காடாக இருந்தது.
மூலாதாரப் பணவீக்கம் 2008 நவம்பர் மாதம் 5.5 விழுக்காட்டை எட்டியதே முந்திய உச்சம்.
அதேபோல, ஒட்டுமொத்தப் பணவீக்கம் செப்டம்பரில் 7.5 விழுக்காடாக உயர்ந்தது. இதற்கு முன் 2008 ஆகஸ்ட்டிலும் இதே அளவு பதிவாகியிருந்தது.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் நேற்று இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டன.
"இவ்வாண்டுத் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த எரிசக்தி, உணவுப்பொருள்களின் விலை குறையத் தொடங்கியுள்ளது. ஆனாலும், விநியோகத் தொடரில் பிரச்சினைகள் நீடிப்பதால் விலை அதிகமாகவே இருக்கும்," என்று அவை தெரிவித்துள்ளன.
சிங்கப்பூர் நாணய மதிப்பை வலுவாக வைத்திருக்கவும் இறக்குமதிப் பொருள்களின் விலை ஏற்றத்தால் ஏற்படக்கூடிய பண வீக்கத்தைக் கட்டுக்குள் வைத்து இருக்கவும் ஏதுவாக, கடந்த 2021 அக்டோபரில் இருந்து நாணய ஆணையம் ஐந்து முறை தனது நாணயக் கொள்கையைக் கடுமையாக்கி இருக்கிறது.
உலகளவில் எரிசக்தி, உணவுப் பொருள்களின் விலை குறைந்துள்ள போதும் ஊழியர் சந்தையில் நிலவும் கடுமையான நிலையால் சம்பள நெருக்கடிகள் அதிகரித்துள்ளன என்று மேபேங்க் பொருளியல் வல்லுநர்களான சுவா ஹக் பின்னும் லீ யு ஜேயும் தெரிவித்தனர்.
"அடுத்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதியிலிருந்து உணவு சேவைகள், கழிவு மேலாண்மை, நிர்வாகிகள், ஓட்டுநர்கள் போன்ற தொழில்சார் துறைகளுக்கும் படிப்படியான சம்பள உயர்வு முறை விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இதனால் வரும் காலாண்டுகளில் சம்பளமும் உயரும். அதனால், விலையேற்றமும் இருக்கும்," என்பது அவர்களின் கருத்து.
உணவு சேவைகள், சமைக்கப்படாத உணவுப்பொருள்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்ததால் ஆண்டு அடிப்படையில் கடந்த ஆகஸ்ட்டில் 6.4 விழுக்காடாக இருந்த உணவுப் பணவீக்கம், செப்டம்பரில் 6.9 விழுக்காடாக அதிகரித்தது. அதேபோல, ஆகஸ்ட்டில் 3.8 விழுக்காடாக இருந்த சேவைப் பணவீக்கமும் அதற்கடுத்த மாதத்தில் 4 விழுக்காடாக உயர்ந்தது.
மூலாதாரப் பணவீக்கமானது அடுத்த சில காலாண்டுகளுக்குத் தொடர்ந்து உயரலாம் என்றும் 2023 பிற்பாதியில் அது மெதுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு முழுமைக்குமான ஒட்டுமொத்தப் பணவீக்கம் சராசரியாக 6 விழுக்காட்டை ஒட்டி இருக்கும் என்றும் மூலாதாரப் பணவீக்கம் கிட்டத்தட்ட 4 விழுக்காடாக இருக்கும் என்றும் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் முன்னுரைத்து இருக்கின்றன.
2023ஆம் ஆண்டைப் பொறுத்த மட்டில், ஒட்டுமொத்தப் பணவீக்கம் 5.5 முதல் 6.5 விழுக்காட்டிற்கு இடையிலும் மூலாதாரப் பணவீக்கம் 3.5 முதல் 4.5 விழுக்காட்டிற்கு இடையிலும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள பொருள், சேவை வரி உயர்வையும் இந்த முன்னுரைப்புகள் கணக்கில் கொண்டுள்ளன.

