ஆக உயரத்தில் இருக்கும் சிங்கப்பூரின் வீடு ஷென்டன் வே பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. 63 மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் உச்சி மாடியில், 305 மீட்டர் உயரத்தில் இந்த வீடு அமைந்திருக்கும். இந்த பிரம்மாண்ட வீட்டிலிருந்து தென் சீனக் கடலை தெளிவாகப் பார்க்கலாம்.
சிறப்பு மின்தூக்கியில் 305 மீட்டர் உயரத்தை ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் சென்றடைய முடியும். இந்த வீட்டின் மற்ற அம்சங்கள் குறித்து மேல் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
எண் 8, ஷென்டன் வேயில் கட்டப்படும் இந்த அடுக்குமாடி, சிங்கப்பூரின் ஆக உயரமான கட்டடமாகவும் திகழும். 148,000 சதுர மீட்டருக்கும் அதிகமான தள பரப்பைக் கொண்ட இந்தக் கட்டடத்தில் அலுவலகங்கள், சொகுசு வீடுகள், கடைகள், பொது இடங்கள் ஆகியவற்றோடு ஹோட்டலும் அமைகிறது.
கட்டுமானப் பணிகள் 2028ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
64 மாடிகள் கொண்ட 'குவாகோ டவுர்' அடுக்குமாடியின் மேல் தளத்தில் உள்ள வீடே, தற்போது சிங்கப்பூரின் ஆக உயரத்தில் இருக்கும் வீடாகும். 283.7 மீட்டர் உயரத்தில் உள்ள அந்த வீட்டை, பிரிட்டிஷ் தொழில்முனைவரான ஜேம்ஸ் டைசன் 2019ல் $73.8 மில்லியனுக்கு வாங்கினார்.
அந்தக் கட்டடத்தை வடிவமைத்த ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் & மெரில் (எஸ்ஓஎம்) எனும் அமெரிக்க வடிவமைப்பு நிறுவனத்தின் வடிவமைப்பாளர்களே ஷென்டன் வே கட்டடத்தையும் வடிவமைக்கிறார்கள்.
இந்தக் கட்டடம் சுரங்க நடைபாதை வழியாக தஞ்சோங் பகார் எம்ஆர்டி நிலையத்துடன் இணைக்கப்படும். சில்லறை விற்பனை இடங்கள் மூன்று மாடிகளைக் கொண்டிருக்கும்.
அலுவலக இடங்கள் மூன்றாவது மாடியில் இருந்து 22வது மாடி வரை அமையும். 24 முதல் 26வது மாடி வரை ஹோட்டல் அமைகிறது. 27வது மாடி முதல் 63வது மாடி வரையில் குடியிருப்பு இடம்பெறுகிறது. 10,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பொது பசுமை இடத்தையும் இக்கட்டடம் கொண்டிருக்கும்.
கட்டடத்தில் உள்ள அனைவரும் வெளிச்சூழலை எளிதாக அணுகும் வகையில், பல தளங்களை ஆகாயத் தோட்டத்துடன் இணைக்கும் வகையில் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர் திரு முஸ்தபா அபாடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

