ஆட்குறைப்பும் வேலையின்மை விகிதமும் அதிகரித்துவரும் நிலையில் சிங்கப்பூரின் வேலைச் சந்தை, மூன்றாம் காலாண்டில் தொடர்ந்து மேம்பட்டிருந்தாலும் அந்த மேம்பாட்டின் வேகம் மெதுவடைவதற்கான அறிகுறிகள் தெரிவதாக மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட தரவுகளில் தெரியவந்துள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த வேலைவாய்ப்பில் 75,600 அதிகரிப்பு பதிவானது.
இதற்கிடையே, வேலையின்மை விகிதத்திலும் ஆட்குறைப்பிலும் சிறிதளவு அதிகரிப்பு பதிவானது.
"வேலைச் சந்தை மீண்டுவருவதன் வேகம் குறைவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் கொவிட்-19 உடன் வாழ்வதை நோக்கி நாடு செல்வதும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளும் எல்லைக் கட்டுப்பாடுகளும் படிப்படியாக அகற்றப்படுவதும் கடந்த சில காலாண்டுகளாக வேலைச் சந்தையின் மீட்சிக்கு ஆதரவாக உள்ளன," என்றது அமைச்சு.
நலிவடைந்து வரும் அனைத்துலக பொருளியல் சூழல், அதிகமான உலகளாவிய பணவீக்கம், நாடுகளுக்கிடையே பதற்றநிலை போன்றவை வேலைச் சந்தையை வரும் மாதங்களில் பாதிக்கும் என்றும் அமைச்சு சுட்டியது.
மூன்றாம் காலாண்டில் ஆட்குறைப்பு எண்ணிக்கை 1,600க்கு அதிகரித்தது. இது முந்தைய காலாண்டின் 830ஐக் காட்டிலும் இருமடங்காகும். ஆட்குறைப்புக்கு ஆளான 1,100 பேர், சேவைகள் பிரிவிலும் 500 பேர் உற்பத்தித் துறையிலும் இருந்தவர்கள் ஆவர்.
நிறுவன மறுசீரமைப்பின் காரணமாகச் சேவைத் துறையிலும் அனைத்துலக அளவில் பொருள்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் உற்பத்தித் துறையிலும் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாக அமைச்சு விளக்கியது.
"அதிகப்படியான பணவீக்கம், கடுமையான மத்திய வங்கியின் நிதிக் கொள்கைகள், அரசியல் நிலையற்ற தன்மை என்ற சூழலில் அனைத்துலக பொருளியல், வீழ்ச்சி காணும் என்று எதிர்பார்த்து நிறுவனங்கள் தங்களின் வர்த்தகச் செயல்பாடுகளை மாற்றி அமைக்கலாம் மற்றும் ஆட்குறைப்பு செய்யலாம்," என்றது அமைச்சு. கட்டுமானத் துறையில் மிகச் சிறிய எண்ணிக்கை அல்லது அறவே ஆட்குறைப்பு இல்லை.
இருப்பினும் கொள்ளைநோய்க்கு முந்தைய காலகட்டத்தில் பதிவான விகிதத்துடன் நிகராக இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டின் வேலையின்மை விகிதம் இருந்ததென அமைச்சு சுட்டியது.
அத்துடன் 2018, 2019 ஆண்டுகளின் சராசரி காலாண்டு விகித அடிப்படையில், கொள்ளைநோய்க்கு முன் பதிவான அளவைக் காட்டிலும் ஆட்குறைப்பு விகிதம் இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் ஒரு படி குறைவாக இருந்ததென்றும் கூறப்பட்டது.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 66,500 வேலைவாய்ப்புகள் பதிவானதைக் காட்டிலும் மூன்றாம் காலாண்டில் அதிகமான வேலைவாய்ப்புகள் பதிவாகின. 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே ஆக அதிகமான எண்ணிக்கை என்று அமைச்சின் தரவுகள் கூறுகின்றன.
இருப்பினும், பொருளியல் வளர்ச்சி குறைந்து வருவதற்கு இடையே வேலைவாய்ப்புகளின் வளர்ச்சியும் குறைவதற்கான ஒருசில முன்கட்ட அறிகுறிகள் உள்ளதென அமைச்சு தெரிவித்தது. குறிப்பாக, கட்டுமானத் துறையிலும் உற்பத்தித் துறையிலும் உள்ள ஊழியர்களில், வெளிநாட்டவர் பெரும்பான்மையினர் என்ற நிலையில் குடியிருப்பாளர் அல்லாதவர்களால் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் அதிகமான சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் அடங்கிய குடியிருப்பாளர்கள், வேலைவாய்ப்பைப் பெற்றபோதும் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு சற்று மெதுவடைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
தகவல்தொடர்பு, நிபுணத்துவச் சேவைகள், நிதிச் சேவைகள் ஆகியவற்றில் குடியிருப்பாளர் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருந்தன. செப்டம்பரில் குடியிருப்பாளர் வேலையின்மை விகிதம் 2.9 விழுக்காடும் சிங்கப்பூரரின் வேலையின்மை விகிதம் 3.1 விழுக்காடும் அதிகரித்தன. ஜூனில் வேலையில்லா குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 69,300ஆக இருந்தது. அது செப்டம்பரில் 70,900 ஆக அதிகரித்தது.

