பிரிட்டனின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசுகையில், 'பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகளுக்குத் தாம் ஒரு பிரதிநிதி உருவம்' என்று குறிப்பிட்டிருந்தார். தீபாவளி அன்று முடிவாக வேண்டிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கூடிய விரைவில் கைகூடுவதைத் தாம் எதிர்பார்ப்பதாகவும் திரு சுனக் கூறியிருந்தார்.
இரண்டு மாதங்களில் பிரிட்டனின் மூன்றாவது பிரதமராக திரு ரிஷி சுனக் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பதவியேற்றார். அதையடுத்து திரு மோடிக்கும் அவருக்கும் நிகழ்ந்த முதல் உரையாடல் இது. இரு நாடுகளும் மேலும் அணுக்கமான ஓர் உறவை வளர்த்துக்கொள்வதே தமது திட்டம் என்றும் திரு சுனக் கூறியிருந்ததாக அவரின் அலுவலகம் தெரிவித்தது. முழுமையான ஒரு திறந்த வர்த்தக ஒப்பந்தத்தை முடிவுசெய்வதன் தொடர்பாக பிரிட்டனும் இந்தியாவும் தங்களின் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் காண்பதே பிரதமரின் விருப்பம் என்றது அலுவலகம்.
உலகின் வளர்ந்துவரும் நாடுகளை வலுவாக்க, இரு பெரும் ஜனநாயக நாடுகளாக இந்தியாவும் பிரிட்டனும் இணைந்து செயல்பட இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது. பாதுகாப்பு, தற்காப்பு, பொருளியல் பங்காளித்துவம் ஆகிய அம்சங்களில் இரு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

