வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் நிதிப் பற்றாக்குறை மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில் சாதனை அளவாக $4.367 பில்லியனாகியது. இது, அதற்கு முந்திய ஆண்டு பற்றாக்குறையான $2.346 பில்லியன் தொகையுடன் ஒப்பிடுகையில் ஏறத்தாழ 86 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டப்பட்டு வருகின்ற அடுக்குமாடி வீடுகள் தொடர்பில் எதிர்பார்க்கப்படும் இழப்புகள், மத்திய சேமநிதி வீட்டு மானியம் வழங்கீடு, வீட்டு உடைமைத் திட்டத்தின்கீழ் வீடுகளை மானியத்துடன் விற்பதால் ஏற்படக்கூடிய இழப்பு ஆகியவையே வீவக பற்றாக்குறையில் பெரும் பங்கு ($3.85 பில்லியன்) வகிக்கின்றன.
வீவக நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தது.
வீட்டு உடைமைச் செயல்திட்டத்தின்கீழ் ஏற்பட்டு உள்ள இழப்பு, முந்திய ஆண்டு இழப்பைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காக இருக்கிறது.
சென்ற ஆண்டில் 66 விழுக்காடு அதிகமான பிடிஓ திட்டங்கள் செயல்படத் தொடங்கின. முன்னிலும் அதிகமான வீடுகள் விற்கப்பட்டன. இவையே இந்த இழப்பிற்குக் காரணம் என்று கழகம் விளக்கியது.
கழகம் நேற்று தனது ஆண்டறிக்கையை வெளியிட்டது. அதற்கு முன்பாக வெள்ளிக்கிழமை அது செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தது.
முன்பெல்லாம் கழகம் தனது அறிக்கையை சாதாரணமாக வெளியிட்டுவிடும். கடந்த இரண்டாண்டுகளில் வீட்டு விலைகள் அதிகரித்து வந்துள்ளன. இதனால் வீடுகளின் விலைகள் வாங்க முடியாத அளவுக்குக் கைமீறிப் போய்விடுமோ என்ற கவலை அதிகரித்து இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், கழகம் செய்தியாளர் சந்திப்பை நடத்தி பிறகு அறிக்கையை நேற்று வெளியிட்டது.
இதனிடையே, வீவக பற்றாக்குறை பற்றி கருத்துக் கூறிய தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, வீட்டுடைமைத் திட்டத்தின்கீழ் கழகத்திற்கு ஏற்பட்டுள்ள கணிசமான இழப்பு, பொது வீடுகள் மக்களுக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய வகையில், அவர்களுக்கு எட்டக்கூடிய வகையில், எல்லாரையும் உள்ளடக்கும் வகையில் இருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
செய்தியாளர் விளக்கக் கூட்டத்தில் பேசிய வீவக தலைமை நிர்வாகி டான் மெங் டுய், புதிய அடுக்குமாடி வீடுகளுக்குக் கொடுக்கப்பட்ட மானியமே சாதனை அளவிலான பற்றாக்குறைக்குப் பெரிதும் காரணம் என்று விளக்கினார்.
அதோடு, வீவக வீட்டு மானிய விநியோகமும் மேலும் அதிக வீடுகளின் கட்டுமானத் தொடக்கமும் கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட கட்டுமானச் செலவு அதிகரிப்பும் இதர காரணங்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிடிஓ வீடுகளின் விலைகள் கழகத்திற்கு ஏற்படக்கூடிய மொத்தக் கட்டுமானச் செலவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்றாரவர்.
மொத்தக் கட்டுமானச் செலவில் நிலத்தின் விலையும் வீடுகளைக் கட்டுவதற்கான செலவுகளும் உள்ளடங்கும்.
அப்படி நிர்ணயிப்பதற்குப் பதிலாக புதிய வீடுகளின் சந்தை மதிப்பை கழகம் தீர்மானிக்கிறது. அதற்கு அருகில் இருக்கும் ஒப்பிடத்தக்க மறுவிற்பனை வீடுகளை அது கருத்தில் கொள்கிறது.
குடும்ப வருமானம், மக்களுக்குக் கிடைக்கக்கூடிய வீடுகளின் வகைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வீடுகள் மக்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தி, அதற்காக கணிசமான மானியத்தை கழகம் வழங்குகிறது என்று அவர் மேலும் விளக்கினார்.

