ஊட்ரம் சமூக மருத்துவமனை, சிங்ஹெல்த் டவர் ஆகியவற்றில் சிகிச்சை பெறும் நோயாளிகளைப் பார்க்கச் செல்வோர், இப்போது வரிசையில் நின்று தங்களைப் பதிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை.
பதிலாக, அவர்கள் தங்கள் முக அடையாளத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு சாதனத்தின் வழியாக அனுமதி பெற்று உள்ளே சிகிச்சைப் பிரிவுகளுக்குச் செல்லலாம்.
மருத்துவமனைப் போவதற்கு முன்பே அவர்கள் இணையம் மூலம் தங்களைப் பதிந்துகொள்ளலாம். இதற்காக சிங்ஹெல்த் அமைப்பும் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் நிறுவனமும் ஒரு முறையை உருவாக்கி இருக்கின்றன. பதிவு நடைமுறையின் ஓர் அங்கமாக தாங்களே எடுத்துக்கொண்ட படத்தை வருகையாளர்கள் இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.
இணையத்தில் இடம்பெறும் புதிய அம்சத்தில் முகச் சரிபார்ப்பு ஏற்பாடு இருக்கிறது. இந்த வசதியை சிங்பாஸிற்காக அரசாங்க தொழில்நுட்ப அமைப்பு உருவாக்கி இருக்கிறது.
வருகையாளர்களின் முகங்கள் ஒரு படச் சாதனம் மூலம் மருத்துவமனையின் நுழைவாயிலில் சரிபார்க்கப்படும். அந்தச் சாதனம் உடல் வெப்பநிலையையும் அளவிடும். முக அடையாளம் ஒத்து இருக்கும் பட்சத்தில் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கும். உடல் வெப்பநிலை அளவுக்கு அதிகமாக இருந்தால் அனுமதி கிடைக்காது.
இத்தொழில்நுட்பம் செப்டம்பர் 5 முதல் ஆறு மாத காலம் பரிசோதிக்கப்படுகிறது. இது, வருங்காலத்தில் சுகாதாரக் குழுமத்தின் எல்லா மருத்துவ நிலையங்களிலும் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

