இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மோர்பி என்ற நகரில் மச்சு என்ற ஆற்றின் குறுக்கே அமைக்கப் பட்டிருந்த தொங்குபாலம் அறுந்து, ஆற்றில் விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 134ஐ தாண்டி விட்டதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என சில ஊடகங்கள் கூறின.
அந்தப் பாலம் 150 ஆண்டுகள் பழைமையானது. கடந்த ஆறு மாத காலமாக பாலம் சீரமைக்கப்பட்டு கடந்த மாதம் 26ஆம் தேதி குஜராத்தின் புத்தாண்டு நாளன்று தான் பொதுமக்களுக்குப் பாலம் திறக்கப்பட்டது. பாலம் எந்த ஒரு நேரத்திலும் 100 பேரைத் தாங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 'சத்' எனப்படும் சமய வழிபாட்டை ஒட்டி விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பாலத்தில் ஏறத்தாழ 500 பேர்வரை கூடினர்.
அவர்களில் பலரும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் படம் எடுத்துக்கொண்டும் பாலத்தின் தொங்குகம்பிகளில் தொற்றி ஏறி இறங்கி விளையாடிக்கொண்டும் இருந்ததாகத் தெரிகிறது. அப்போது திடீரென்று 233 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் அகலமும் கொண்ட அந்தப் பாலம் அறுந்து ஆற்றில் விழுந்தது.
ஏராள மக்கள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். தகவல் பரவியதும் பொதுமக்களும் மீட்புப் பணியாளர்களும் உதவிக்கு விரைந்தனர். மொத்தம் 177 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இதனிடையே, மூன்று நாள் பயணம் மேற்கொண்டு குஜராத் சென்றிருக்கும் பிரதமர் மோடி உடனடியாக மீட்புப் பணிகளை முடுக்கிவிடும்படி உத்தரவிட்டார்.
அதையடுத்து, ஏராளமான படகுகளும் முக்குளிப்பாளர்களும் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்திய ராணுவம், கடற்படையைச் சேர்ந்த வீரர்களும் கடலோடிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அந்தப் பாலத்தை சீரமைத்த யாதவ் என்பவருக்கு எதிராக குஜராத் காவல்துறை புலன்விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.
பாலத்தைப் புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த ஒன்பது பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இந்தச் சம்பவம் பற்றி விசாரணை நடத்த ஐவர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்து இருக்கிறது.
இதனிடையே, இந்தச் சம்பவம் பற்றிக் கருத்து கூறிய எதிர்த்தரப்பு தலைவர்கள், அரசாங்கம் போதிய கவனம் செலுத்தாமலும் பாலத்தின் உறுதித்தன்மையை உறுதிப்படுத்தா மலும் அவசரப்பட்டு பாலத்தைப் பொதுமக்களுக்குத் திறந்துவிட்டதாகக் குறைகூறினர்.
குஜராத் தொங்குபாலம் ஆற்றில் விழுந்த விபத்தில் உயிர் இழந்தவர்களில் 12 பேர் பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மோகன்பாய் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
"ஐந்து குழந்தைகள் உட்பட என் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேரை இழந்து தவிக்கிறேன். என் சகோதரியின் குடும்பத்தினரும் பலியாகிவிட்டனர்.
"இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அதிகம். மிகவும் கவலையாக இருக்கிறது," என குஜராத்தின் ராஜ்கோட் தொகுதி எம்.பி.யான மோகன்பாய் கூறினார்.

