நேப்பாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்றுக் காலை நேர்ந்தது. அதில் குறைந்தது அறுவர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், இந்திய தலைநகரான புதுடெல்லியிலும் மணிப்பூரிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நேப்பாளத்தின் மேற்கு மாவட்டமான டோட்டியில் பல வீடுகள் தரைமட்டமாகியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நள்ளிரவில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்த வேளை நிலநடுக்கத்தால் பயந்து வீடுகளில் இருந்து வெளியேறிச் சாலைகளுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
நேப்பாள நிலநடுக்கத்தின் மையம், பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் பதிவானதாக டெல்லியின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஐவருக்குப் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் டோட்டி காவல்துறையினர் கூறியுள்ளனர். இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.
குறைந்தது இரண்டு பேரை இன்னும் காணவில்லை என்றும் மீட்கப்பட்டோரில் ஒரு குழந்தையும் அடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் ஷெர் பகதூர் டூபா டுவிட்டர் வழி தமது அனுதாபங்களைத் தெரிவித்தார்.
நேப்பாளத்தில் முன்னதாக 2015ல் நேர்ந்த இரு பெரும் நிலநடுக்கங்களில் கிட்டத்தட்ட 9,000 பேர் உயிரிழந்துவிட்டனர்.
நகரங்களும் பல நூற்றாண்டு பழமைவாய்ந்த ஆலயங்களும் அந்த நிலநடுக்கங்களால் அழிக்கப்பட்டன. அத்துடன் பொருளியலில் $6 பில்லியன் அமெரிக்க டாலர் (S$8 பி.) இழப்பும் நேர்ந்தது.
அதையடுத்து நேப்பாளம் மீண்டுவரும் நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

