ஆசியான் உறுப்பு நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
பெரிய வல்லரசுகளுக்கு இடையில் போட்டாபோட்டி அதி கரிப்பதால் ஆசியான் பிரிந்துவிட வழிவகுத்துவிடக்கூடாது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
அதாவது, அந்தத் தென்கிழக்கு ஆசிய அமைப்பு தொடர்ந்து திறந்தநிலையில் இருந்துவர வேண்டும்; வெளி பங்காளி நாடுகளை ஈடுபடுத்து வதில் எல்லாரையும் உள்ளடக்கும் அணுகுமுறையை அது கடைப்பிடிக்க வேண்டும்;
ஆசியான் உறுப்பு நாடுகள் ஐக்கியத்தைக் கட்டிக்காக்க வேண்டும்; நடுநிலையைத் தொடர்ந்து அது கடைப்பிடித்து வரவேண்டும்; இப்படி செயல்படுவதன் மூலம் ஆசியான் ஏற்புடைய, பொருத்தமான, நம்பத்தகுந்த அமைப்பாக தொடர்ந்து இருந்து வரமுடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.
கம்போடியாவின் நோம்பென் நகரில் 41வது ஆசியான் உச்சநிலை மாநாடு தொடங்கியது.
அதில் கலந்துகொண்ட சக தலைவர்கள் மத்தியில் உரை ஆற்றிய திரு லீ, உலகில் இப்போது புவிசார் அரசியல் பதற்றங்கள் கூடிவருவதாகவும் வல்லரசு நாடுகளுக்கு இடையில் போட்டாபோட்டி அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்த விவகாரமும் இதில் அடங்கும் என்றார்.
ஆசியானின் 40, 41வது உச்சநிலை மாநாடு நேற்று தொடங்கியது. அதற்கு கம்போடியப் பிரதமர் ஹுன் சென் தலைமை ஏற்று இருக்கிறார்.
அந்த இரண்டு மாநாடுகளும் பொதுவாக ஓராண்டில் தனித்தனியாக முன்னும் பின்னும் நடக்கும். ஆனால், இந்த ஆண்டு ஒரேநாளில் நடக்கின்றன.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் பற்றிக் குறிப்பிட்ட திரு லீ, அதன் காரணமாக இரு தரப்புகளுக்குமே பேரளவில் தொடர் விளைவுகள் ஏற்படும் என்றும் அதோடு மட்டுமின்றி, இந்த வட்டாரமும் உலகமும் பாதிப்படையும் என்றும் கூறினார்.
தென்சீனக் கடல் பகுதி பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், அதன் வழியாக நடக்கும் வர்த்தகத்தைச் சுட்டிக்காட்டினார்.
இதைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், அந்தப் பகுதியில் அமைதியையும் நிலைப்பாட்டையும் நிலைநாட்டும் பொறுப்பு ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.
தென்சீனக் கடல் தொடர்பான சச்சரவுகள், அமைதியான முறையில் அனைத்துலக சட்டத்திற்கு உட்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
தென்சீனக் கடலில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகளையும் பதற்றங்கள் தலைதூக்குவதற்கான வாய்ப்புகளையும் கூடுமானவரை குறைப்பதற்கு ஆசியான் நாடுகள் தங்களுக்கு இடையிலும் சீனாவோடும் நடத்தை நியதிகளின் பேரில் தொடர்ந்து செயல்பட்டு வரவேண்டும் என்றார் திரு லீ.
அத்தகைய நடத்தை நியதிகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் 20 ஆண்டுகளாக நடந்துவருகின்றன.
ஆசியான் தலைவர்களுக்கும் சீனப் பிரதமர் லீ கெச்சியாங்கிற்கும் இடையில் நடந்த சந்திப்பின்போது ஆசியான்-சீனா தாராள வர்த்தக வட்டாரத்தை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.
பெரும் வல்லரசுகளை ஈடுபடுத்தி பல்வேறு நிலவரங்களையும் பற்றி விவாதிப்பது எப்படி என்பதையும் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது எப்படி என்பதையும் கிழக்கு ஆசிய உச்சநிலை மாநாடு மூலம் ஆசியான் வெளிப்படுத்துகிறது என்பதை திரு லீ சுட்டினார்.
இந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. அதில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, ரஷ்யா, அமெரிக்க ஆகிய நாடுகளின் தலைவர்களை ஆசியான் தலைவர்கள் சந்திக்கிறார்கள்.
நிலையில்லாத ஓர் உலகில் தென்கிழக்கு ஆசியாவில் அமைதியை, நிலைப்பாட்டை, வளர்ச்சியை ஆசியான் எப்படி நிலைநாட்டி வந்திருக்கிறது என்பதை தொடக்கத்தில் திரு லீ விவரித்தார்.
ஆனாலும், இப்போது பதற்றமும் அனைத்துலகப் பிரச்சினைகளும் தலைதூக்குவதால் அத்தகைய அமைதியை ஆசியான் கிள்ளுக்கீரையாகக் கருத முடியாது என்று திரு லீ எச்சரித்தார்.

