நாள்பட்ட நோய்களை சமாளிக்க வெளிநாட்டு ஊழியருக்கு உதவி

நாள்பட்ட நோய்களை சமாளிக்க வெளிநாட்டு ஊழியருக்கு உதவி

2 mins read
ba512b05-4ecc-44d0-9d66-71c2fbb54b43
ஃபுல்லர்ட்டன் ஹெல்த் நிறுவனம் கல் சர்க்கிளில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடத்திவரும் மருத்துவ நிலையத்தில் ஊழியர் ஒருவர் மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூனுக்கு விளக்கமளித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நாள்பட்ட நோயுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அந்நோயைச் சமாளிக்க விரைவில் உதவி பெறவுள்ளனர். மனிதவள அமைச்சு அதன் தொடர்பில் அவர்களுக்காக புதிய திட்டத்தை சனிக்கிழமை (நவம்பர் 12) தொடங்கியது.

அத்திட்டத்தின்கீழ், நாள்பட்ட நோய்கள், தொற்றுநோய்கள், பல் நோய், சத்துணவு, மனநலம் ஆகியவை பற்றி வெளிநாட்டு ஊழியர்களின் தாய்மொழிகளில் உள்ள தகவல்கள் மனிதவள அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். அவை வெளிநாட்டு ஊழியர்களுக்கான மருத்துவ நிலையங்களிலும் கிடைக்கும்.

அடிப்படைச் சுகாதாரத் திட்டத்தில் சேர்ந்திருக்கும் 40 வயதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதயநோய்க்கான அடிப்படை பரிசோதனைக்கும் ஒவ்வோர் ஆண்டும் அனுப்பப் படுவர். அதேபோல குடும்பத்தாருக்கு நாள்பட்ட நோய் இருப்பவர்களும் அந்த இதயநோய் பரிசோதனைக்குச் செல்வார்கள்.

பிசிபி என்று அழைக்கப்படும் அடிப்படை சுகாதாரத் திட்டம் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கட்டாயமானது. அந்த மருத்துவத் திட்டத்துக்கான தொகையை முதலாளிகள் செலுத்துகின்றனர்.

'புரோஜெக்ட் மோக்கா' (வாய், மற்றும் நாள்பட்ட நோய்கள், பிணி களைச் சமாளித்தல்) என்று அழைக்கப்படும் அந்தத் திட்டத்தின்மூலம் சுமார் 300,000 வெளிநாட்டு ஊழியர்கள் மூலம் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபுல்லர்ட்டன் ஹெல்த் நிறுவனம் கல் சர்க்கிளில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடத்திவரும் மருத்துவ நிலையத்தை சனிக்கிழமை சென்று பார்வையிட்டபோது மூத்த மனிதவளத் துணை அமைச்சர் கோ போ கூன் புதிய திட்டத்தைத் தொடங்கிவைத்தார். வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடல்நலமில்லாதபோது அவர்களுக்குப் பராமரிப்பு வழங்குவது மட்டும் போதாது என்றார் டாக்டர் கோ.

கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், புதிதாக சிங்கப்பூர் வரும் எட்டு வெளிநாட்டு ஊழியர்களில் ஒருவருக்கு, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு போன்ற நாள்பட்ட நோய்களில் ஒன்றாவது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

"முறையான மருத்துவ சிகிச்சை இல்லாமல் இந்நோய்கள் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்பட்டால், நமது வெளிநாட்டு ஊழியர்களுக்குக் காலப்போக்கில் கடுமையான நோய்ச் சிக்கல்கள் ஏற்படும். அது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்."

"இது முதலாளிகளுக்கும் பல சுமைகளை ஏற்படுத்தலாம். அதனால் எல்லாரும் ஒட்டுமொத்த மாகப் பலன்பெறுவதற்கு அதைச் சமாளித்தாக வேண்டும்," என்று டாக்டர் கோ கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான விளக்க சாலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். தேசியப் பல்கலைக்கழகம், வாய், பல் சுகாதாரம் பற்றி வெளிநாட்டு ஊழியர்களுக்கு எடுத்துரைக்க கடந்த செப்டம்பரில் நடத்திய நிகழ்ச்சி அதற்கான முன்னோட்டமாக அமைந்தது.