இந்த வட்டாரம் தொடர்ந்து செழிப்படைய நிலையான புவிசார் அரசியல் சூழல் முக்கியம் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்திக் கூறினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் நேரடியாக சந்திக்கவிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையில் உறவு சீர்கெடுவதைத் தடுக்க மிக முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.
கம்போடியாவின் நோம்பென் நகரில் நடந்த கிழக்கு ஆசிய கருத்தரங்கையொட்டி செய்தியாளர்களிடம் திரு லீ பேசினார்.
"அமெரிக்க-சீன அதிபர்கள் வெளிப்படையாகப் பேசி தங்கள் கருத்துகளை முன்வைக்க வேண்டும். பிரச்சினைகள் பற்றி அவர்களுக்குத் தெரியும்.
"அவற்றுக்குத் தீர்வு காணும் அரசியல் உறுதியுடன், விவேகத்துடன் இரு தரப்பும் செயல்பட வேண்டும்," என்றார் திரு லீ.
"இந்தோனீசியாவில் நடக்கும் ஜி20 உச்சநிலை மாநாட்டை ஒட்டி திரு பைடனும் திரு ஸியும் இன்று சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தச் சந்திப்பு நல்லபடி நடக்கும் என்று நம்புகிறேன்.
"அமெரிக்க-சீன உறவு சீர்கெடுவதைத் தடுப்பதில் அந்தச் சந்திப்பு முக்கியமானது.
"அதன்மூலம் பரஸ்பர நம்பிக்கை பலப்படும். பல்வேறு தனிப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் தொடர்பில் செயல்படுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவும் அந்தச் சந்திப்பு வழிவகுக்கும்," என்று திரு லீ குறிப்பிட்டார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பிரச்சினைகள் வலுத்துள்ளன.
உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்ததால் பல விளைவுகள் ஏற்பட்டு இருக்கின்றன. என்றாலும்கூட நோம்பென் நகரில் நடந்த 18 நாடுகளை உள்ளடக்கிய கிழக்காசிய கருத்தரங்கில் அமெரிக்க அதிபர், சீனப் பிரதமர், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்தது பற்றி கருத்து கூறிய பிரதமர் லீ, ரஷ்யாவின் அந்தச் செய்கை அனைத்துலக சட்டத்தை மீறிய செயலாகும் என்றார்.
அதன் மூலம் நிலைப்பாட்டுக்கு மிரட்டல் ஏற்பட்டு இருக்கிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.
உக்ரேன் பிரச்சினைக்கு விரைவில் அமைதித் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே ஆசியானின் விருப்பம் என்பதை தாங்கள் மீண்டும் வலியுறுத்திக் கூறுவதாக திரு லீ தெரிவித்தார்.
இதனிடையே, ஆசியான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தாராள வர்த்தக வட்டாரத்தை மேம்படுத்துவதற்கான கணிசமான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன.
நெருக்கடி காலத்தின்போது அத்தியாவசியப் பொருள்கள் தடைபடாமல் கிடைப்பதை உறுதிப்படுத்த சேர்ந்து பாடுபட அந்தத் தாராள வர்த்தக வட்டார நாடுகள் உறுதி தெரிவித்துள்ளன.
நியூசிலாந்துடன் மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு ஒன்றிலும் சிங்கப்பூர் கையெழுத்திட்டது.
அந்த உடன்பாடு பசுமைப் பொருளியலில் வட்டார ஒத்துழைப்புக்கு வழிகாட்டும் ஓர் ஏற்பாடாக இருக்கும் என்று திரு லீ வர்ணித்தார்.
இருந்தாலும் நம் முயற்சி களுக்குக் கிடைக்கும் வெற்றி என்பது நிலையான புவிசார் அரசியல், பாதுகாப்புச் சூழலைப் பொறுத்தே இருக்கும் என்று திரு லீ வலியுறுத்திக் கூறினார்.
இதனிடையே, ஆசிய பசிபிக் பரந்த படிப்படியாக முன்னேற்றம் காணும் பங்காளித்துவ உடன்பாட்டில் (சிபிடிபிபி) சேர சீனா விண்ணப்பித்து இருப்பதன் முடிவு பற்றி இனிமேல்தான் தெரிய வரும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
அந்த உடன்பாட்டில் சேர இதர நாடுகளும் விண்ணப்பித்து உள்ளன. எல்லாமே அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிய உயர்ந்த தரங்களை நிறைவேற்ற வேண்டி இருக்கும் என்றாரவர்.
அந்தப் பங்காளித்துவ உடன்பாடு திறந்த நிலையிலான ஒன்றாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அது எல்லா நாடுகளையும் உள்ளடக்கும் உடன்பாடாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
இருந்தாலும்கூட அதில் அங்கம் வகிக்கும் நாடுகள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் இருக்கின்றன என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அந்த உடன்பாட்டில் தெள்ளத்தெளிவாக விதிமுறைகள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன.
ஆகையால், அந்த உடன்பாட்டில் சேர சீனா கொண்டுள்ள ஆர்வத்தை கொள்கை அளவில் ஆதரிப்பதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது என்றார் அவர்.
அமெரிக்க-சீன அதிபர்கள் சந்திப்பு முக்கியமான ஒன்று என விளக்கம்

